உதயகுமார் கடைசியா இரட்டை இலையில் போட்டியிடுறாரு… இதுக்கு அப்புறம் தாமரைதான்; காங்கிரஸ் எம்பி கிண்டல்

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் காங். செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தற்போது அமித்ஷாதிமுகவாக ஆகி விட்டது. அமித்ஷா கட்டுப்பாட்டில் அந்த கட்சி உள்ளதால் தற்போது திருமங்கலத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கடைசி முறையாக இரட்டை இலையில் போட்டியிடுகிறார். இனி வரும் தேர்தல்களில் அவர் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுவார். பாஜ, ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் காலூன்றாமல் இருப்பதற்கும் அவை வளர்ந்து விடாமல் தடுக்க மதச்சார்பற்ற கூட்டணியை காங்கிரஸ் கட்சியினர் ஆதரிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமின்றி, எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் பரப்புரை செய்வதற்கான பிரச்னை இருந்து வருகிறது. திடீரென நாடாளுமன்றத்தினை ஒன்றிய அரசு கூட்டியுள்ளது. 234 தொகுதிகளில் கூடுதலாக 117 தொகுதிகளை உருவாக்க யாருக்கும் தெரியாமல் பிரதமர் மோடி, அமித்ஷா வேலை பார்த்து வருகின்றனர். மோடியும், அமித்ஷாவும் எவ்வளவு தூரம் பிரசாரத்திற்கு வருகிறார்களோ அது பாஜ கூட்டணிக்கு நஷ்டம். இவ்வாறு கூறினார்.

* உதயநிதி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அவரது பிரசார திட்டத்தின்படி 11ம்தேதி (இன்று) கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று விஜய் வடலூரில் பிரசாரம் செய்ய உள்ளதால் உதயநிதி பிரசாரத்துக்கு தேர்தல் அதிகாரி அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வடலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ள இருந்த பிரசாரம் நாளைக்கு (12ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் காரைக்குடி பிரசாரத்தை முடிந்து விட்டு வந்த நடிகர் விஜய் கடும் சோர்வில் இன்றைய வடலூர் பிரசாரத்தை ரத்து செய்தார்.

Related Stories: