மதுரை: மாஜி அமைச்சர் ெசல்லூர் ராஜூ பங்கேற்கும் பிரசாரக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் பெண்களுக்கு ரூ.250ம், ஆரத்தி தட்டு மற்றும் கும்ப சொம்பும் வழங்கப்படுகிறது. மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரான மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நேற்று பெத்தானியாபுரம் பகுதியில் மேட்டுத்தெரு, பிபி சாவடி, தேனி மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார இடங்களில் அதிமுக கொடிகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தது.
ஏற்கனவே கூட்டணிக் கட்சியினர் ஒத்துழைப்பற்ற நிலையில், கம்பங்களிலும் கூட்டணி கொடிகள் இல்லாமல் இருப்பதைக் கண்ட அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிக் கொடிகளையும் கட்டி வைக்க உத்தரவிட்டனர். ஆனால், பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் கொடிகள் கிடைக்காத நிலையில், ஒரு சில கொடிகளை மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டி வைத்தனர்.
இத்தோடு செல்லூர் ராஜூ பிரசாரம் செய்யும் இடங்களில் அதிகளவில் கூட்டம் கூட்டும் வகையில் முன்னதாக இப்பகுதியின் சில மகளிர் குழுவினர் உதவியுடன் தலைக்கு ரூ.250 கொடுத்து, பெருமளவில் பெண்கள் அழைத்து வரப்பட்டதும், ஆரத்தி எடுப்பதற்காக, முன்கூட்டியே தட்டுகள், கும்ப மரியாதைக்கென சொம்புகள் போன்றவற்றையும் கொடுத்து அழைத்து வந்தனர். இந்த பெண்களில் பலரும் அடுத்தடுத்த பகுதிகளில் நடந்த பிரசாரப் பகுதிக்கும் வண்டியில் ஏற்றி கொண்டு சென்று இறக்கிவிடப்பட்ட நிலையில், ஒரு கூட்டத்திற்கு கூட்டி வந்து, இரு கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றதால் ஐநூறு தரணும் என சில பெண்கள் சண்டையிட்டதையும் காண முடிந்தது.
