குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ராஜேஷ்குமார், பிரவீன், தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்ய வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருங்கல் அருகே நிருபர்களிடம்
கூறியதாவது: 1996ல் எப்படி ஒரு எழுச்சி பெற்று இரண்டு மூன்று இடங்கள் கூட அதிமுகவினால் வர முடியவில்லையோ, அதே எழுச்சியை இப்போது நாங்கள் பார்க்கிறோம். 210 தொகுதிக்கு மேல் திமுக தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் வெற்றி பெறப்போகிறது. இந்தத் தேர்தல் என்பது சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர். ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும். தமிழ் மண்ணை பாதுகாக்க வேண்டும். நேரடியாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்று மோடியும், அமித்ஷாவும், பாஜவும், ஆர்எஸ்எஸ்-ம் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக போர்வையைப் போர்த்திக்கொண்டு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் இதை அடையாளம் கண்டுவிட்டார்கள். ஒருபோதும் மதவாத சக்திகளுக்கும் பிளவுவாத சக்திகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை. எப்படி உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் மக்களுக்கு எதிரான மனநிலையில் பாஜ ஆட்சி இருக்கிறதோ, புல்டோசர் ஆட்சி நடக்கிறதோ, அதுபோன்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்படக் கூடாது. அப்படி விட்டுவிட மாட்டோம் என்று உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் சபதமேற்றிருக்கிறார்கள். அந்த எழுச்சி கண்முன் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
அரசியலே தெரியாத எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது. முதலமைச்சரை பற்றி ‘கொரோனாவில் போயிருக்கலாம்’ என்று சொல்வது எவ்வளவு பெரிய விஷமம்? பாஜ மேலே சவாரி செய்துகொண்டு, முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் அட்டாக் செய்கிறார். இதெல்லாம் ஒரு மானுடம் தாங்கிய மனிதன் பேசலாமா? ஒரு ஜனநாயகவாதி பேசலாமா? வன்மையாகக் காங்கிரஸ் கட்சி எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறது. கிறிஸ்தவ, இஸ்லாமிய, பௌத்த, சீக்கிய மக்களுக்கு எதிராகவும், எல்லா மக்களுக்கும் எதிராக இருப்பதுதான் பாஜ. பாஜவிற்குப் பன்முகம் கிடையாது, கோரமுகம் தான்- ‘அக்ளி பேஸ்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* விஜய்யை விட ரஜினி, அஜித்துக்கு ரசிகர்கள் அதிகம்
‘நான் ஒரு தமிழ்நாட்டுப் பிரஜையாக, அரசியல் தெரிந்தவனாகச் சொல்கிறேன்… விஜய்யை விட அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம்…ஏராளம்…ஏராளம். அதற்கு நிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் ஏராளம். ரஜினிகாந்த் ரோட்டில் வந்தார் என்றால் அந்த கிராமம் எப்படி இருக்கும்? அந்த நகரம் எப்படி இருக்கும்? ரஜினிகாந்த் வர்றார் அந்தப் பகுதிக்குன்னா..அஜித் வர்றார்னா எப்படி இருக்கும்? அதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று செல்வபெருந்தகை கூறினார்.
* பாஜ-தவெக மறைமுக கூட்டணி?
திருப்பூர் தெற்கு தொகுதியை பொறுத்தவரை வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையின மக்களின் வாக்குகள் உள்ளன. திருப்பூர் தெற்கு தொகுதியில் பாஜவின் கடந்த கால செயல்பாடுகள், தற்போது பாஜ வேட்பாளராக உள்ள தங்கராஜின் தந்தை தலைமை தாங்கும் இந்து முன்னணி அமைப்பின் செயல்பாடுகள் ஆகியவை சிறுபான்மை மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக இந்த வாக்குகள் பாஜவுக்கு சாதகமாக திரும்பாது என்பது தெரிந்ததே.
அந்த வாக்குகளை சிதறடிக்க தவெகவை பயன்படுத்த பாஜ தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதசார்பற்ற வாக்குகள் பிரிந்தால், அது தங்களுக்கு சாதகமாக அமையும் என்பது பாஜ தரப்பின் கணக்காக உள்ளது. தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு முன்னால் தவெகவின் பணிகள் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தீவிரமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த பணி தெற்கு தொகுதியில் சுணக்கம் காணப்படுவதால் மறைமுக கூட்டணி நிலவுகிறதோ? என்ற சந்தேகம் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் அறிவிப்பு வந்து, மற்ற வேட்பாளர்கள் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தவெக வேட்பாளரின் மெத்தனப் போக்கு தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் வேலைகளை முடுக்கிவிட வேண்டிய வேட்பாளர், போதிய ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருப்பது ஏன்? என சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும் தகவல் உண்மை தானா என்ற குழப்பத்தில் தவெக தொண்டர்கள் உள்ளனர். ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகளால் திருப்பூரில் சிறு,குறு தொழில் முடக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள், கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி மற்றும் பண்டிகை காலங்களில் இந்து முன்னணி அமைப்பினரின் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சென்று தீவிர பிரசாரம் மேற்கொள்ளாமல் தவெக வேட்பாளர் அமைதி காப்பது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
