சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த வாரம் பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் வருகை தந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சி தலைவர்கள் மாவட்டம் தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முற்றுகையிட இருக்கிறார்கள்.
பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர்கள் முதல் பல்வேறு மாநில முதல்வர்கள் வரை தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அதோடு கடந்த இரண்டு மாதங்களில், பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தமிழகத்திற்கு வருகை தந்து, பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி, வரும் 15ம்தேதி மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். அப்போது நாகர்கோவிலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி வருகிற 15ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வரும் 15ம்தேதி விமானம் மூலமாக கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நாகர்கோவில் வருகிறார். அவர் வரக்கூடிய ஹெலிகாப்டர் மறவன் குடியிருப்பில் உள்ள போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்குகிறது. பின்பு அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் வேப்பமூடு பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து வடசேரி வரையிலான ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபெறும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதேபோன்று, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் அடுத்த வாரம் தமிழ்நாட்டில் பிரச்சாரத்துக்காக வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ராகுல் காந்தியின் வருகை மிக அவசியம் என்று திமுக தலைமை கருதுகிறது. இந்த இடங்கள் பாரம்பரியமாகவே காங்கிரஸ் கட்சிக்கு பலம் வாய்ந்தவை என்பதால், அங்கே ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தால் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பது திமுகவின் கணக்காக உள்ளது.
அதேபோன்று தமிழகத்தின் மையமான திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தால், அது மாநிலம் முழுவதும் ஒரு மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல்காந்தியின் பிரச்சாரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலில் வட மாநிலங்களில் நிலவும் முக்கிய அரசியல் நகர்வுகளில் ராகுல்காந்தி கவனம் செலுத்தி வருவதால் அவரது தமிழகம் வருகையில் தாமதம் ஏற்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராகுல் காந்தி ஒரே ஒரு முறை தமிழகம் வந்தாலும், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கடைசி சில நாட்களில் புயலாகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது ராகுல்காந்தியின் தமிழக பிரச்சாரம் பயணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என்றும், அன்று காலையில் சென்னை விமான நிலையம் வரும் அவர் ஹெலிகாப்டரில் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார். அங்கு தனது தந்தை ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பிரசாரத்தை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், இதையடுத்து பொன்னேரி, வேளச்சேரி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரசாரத்தின் போது ராகுல் ‘ரோடுஷோ’ செல்வதற்கான இடங்களை காங்கிரசார் தேர்வு செய்து வருகிறார்கள்.
சென்னை பிரசாரத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் தூத்துக்குடி செல்வதாகவும், அன்று தூத்துக்குடியில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இருவரும் ஒரே மேடையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்ட உள்ளதாகவும் பிரச்சார பயணம் தயாராகி உள்ளது என்று டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, வரும் 15 மற்றும் 16ம்தேதிகளில் மீண்டும் ராகுல்காந்தி தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வரவிருப்பதாகவும் அப்போது பிரியங்காவும் வருவார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரசாரத்துக்கு வரும் ராகுல், பிரியங்கா இருவரும் தனித்தனியாக கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் பிரசாரம் மேற்கொள்ள பயண திட்டங்கள் தயாராகி வருவதாகவும் காங்கிரசார் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
