சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த விதம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென நுழைந்த முதலமைச்சர், அங்கிருந்த டிக்கெட் கவுன்டருக்கு சென்று டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறினார். ரயிலில் சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை வரை அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது ரயில் அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு மற்றும் ஏ.ஜி.டி.எம்.எஸ் ஆகிய நிலையங்களைக் கடந்து சென்றது. இறுதியில் தேனாம்பேட்டை நிலையத்தில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்தார்.
கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு நின்றபடியே அவர் பயணம் செய்தார். இந்த எளிமையான அணுகுமுறை அங்கிருந்த பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. பயணத்தின் போது, அருகிலிருந்த பயணிகளிடம் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். முதல்வர் ரயிலில் இருப்பதை அறிந்த பயணிகள், ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் அவரை நோக்கி வர தொடங்கினர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் முதல்வருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவரும் சோர்வின்றி அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல்வரின் இந்த மெட்ரோ ரயில் பயண வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. முதல்வரின் இந்த எளிய பயணம், அவர் எப்போதும் மக்களோடு இருப்பவர் என்பதை காட்டும் விதமாக அமைந்திருந்தது என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
* தஞ்சையின் மண்வாசனைக்கு…
மெட்ரோ பயணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: காலை பயணம் சென்னை மெட்ரோவில் சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன்.
* மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாக சென்னை விளங்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ ரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம். துணை முதல்வராக இருந்த போது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம். விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கி வரும் முதற்கட்ட திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம் கட்ட திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம். விமான நிலையம்-கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம், தாம்பரம்-கிண்டி, கலங்கரை விளக்கம்-உயர் நீதிமன்றம், சிறுசேரி-கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும் போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும். சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும். வெல்வோம் ஒன்றாக.
