பாஜ தலைவருக்கு மரியாதையே இல்ல…. நயினார் பிரசாரத்தை அதிமுக புறக்கணிப்பு: என்டிஏ கூட்டணியில் சலசலப்பு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே நெல்லை தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரன், சம்பந்தமே இல்லாமல் சாத்தூர் தொகுதியை கைப்பற்றியது உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே நயினாருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் அதிமுகவினர் ஒதுங்கிவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மட்டும் கணக்கிற்காக வந்து தலையை காட்டினார். அதன்பிறகு அவர் நயினார் நாகேந்திரன் கண்ணிலேயே படவில்லை.

இதனால் நொந்துபோன நயினார் நாகேந்திரன், தனது சொந்த ஊரான நெல்லையில் இருந்து ஆதரவாளர்களை சாத்தூர் அழைத்து வந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சாத்தூர் முக்குராந்தல் மெயின்ரோட்டில் நேற்று பிரசாரம் செய்தார். இதில் கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் முக்கிய பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதிமுகவினர் தேர்தல் பணிகள், பிரசாரத்தை முற்றிலும் புறக்கணித்து வருவதால், தேர்தல் முடிவு நயினாருக்கு பேரிடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

* நடுரோட்டில் வைத்து பணம் பட்டுவாடா
நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சாத்தூர் முக்குராந்தல் மெயின்ரோட்டில் நேற்று பிரசாரம் செய்தார். இதிலும் வழக்கம்போல் அதிமுகவில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக தலைக்கு 200 ரூபாய் தருவதாக கூறி பெண்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மொட்டை வெயிலில் நிற்க வைக்கப்பட்டதால் கடும் அவதியடைந்தனர். இங்கு பிரசாரம் முடிந்து நடுரோட்டிலேயே வைத்து பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

* காலில் விழுந்து ஓட்டு கேட்கும் அதிமுக வேட்பாளர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சேதுபதி. இவர் வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக தெலுங்கில் பேசுவது, டீ போட்டு கொடுப்பது என புதுப்புது காட்சிகளை அரங்கேற்றி வருகிறார். இதனொரு பகுதியாக வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக பிரசாரம் செய்யும் இடங்களில் சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசம் பார்க்காமல் சட்டென காலில் விழுந்து ஓட்டு கேட்கிறார். இதனால் பெண்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக செல்லும்போது அங்கு உள்ளவர்களுக்கு சால்வை அணிவித்து வாக்குகள் சேகரிக்கிறார்.

* உதயநிதி காட்டிய படம் உண்மைதான்: பிஸ்கட் போட்டால் நாய்க்குட்டி கூட நன்றியோடு இருக்கும்; எடப்பாடியை விளாசிய சசிகலா
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி அஇபுதமமுக வேட்பாளர் ஹரீஷை ஆதரித்து பொதுச்செயலாளர் சசிகலா நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், ‘‘முன்னாள் முதல்வர் தற்போது உள்ள முதல்வரை பார்த்து கொரோனா காலத்தில் நீங்கள் போயிருக்க வேண்டும் என அவதூறாகப் பேசி இருக்கிறார். இதுவரை ஆண்ட முதல்வர்கள் யாரும் இப்படி கேவலமாக பேசியது கிடையாது. இவர் எப்படி மக்களை நல்வழியில் நடத்துவார்? நல்வழிப்படுத்தத் தெரியாது. பதவி கொடுத்தவர்களுக்கு நன்றியோடு இருந்திருக்க வேண்டும். துணை முதல்வர் ஒரு படத்தைக் காட்டி பிரசாரத்தில் ேபசுகிறார் (சசிகலா காலில் எடப்பாடி விழுந்த படம்). இவர், முன்னாள் முதல்வர், அவர் பால்டாயில் குடித்ததாகச் சொல்கிறார். இதெல்லாம் மக்களுக்குத் தேவையான விஷயமா? மக்களைச் சந்திக்கும் போது, தேவையானதைப் பற்றி மட்டுமே பேசவேண்டும். துணை முதல்வர் காட்டிய படம் என்னவோ உண்மைதான். நீங்கள் பதவி கொடுத்தவர்களுக்கு நன்றி உணர்வடன் இருந்திருக்க வேண்டும். வீட்டில் நாய்க்குட்டி வளர்த்தால் கூட ஒரு துண்டு பிஸ்கட் போட்டால் நன்றியோடு இருக்கும்.அப்படி இருக்கையில், அந்தச் சின்னப்பையன் காட்டுய படத்தில் என்ன தவறு? நடந்ததைத்தானே கூறுகிறார்?’’ என்று பேசினார்.

Related Stories: