தேமுதிக பிரசார பாடல் வெளியீடு: முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்… ஏஐ மூலம் வாக்கு சேகரிக்கும் விஜயகாந்த்

கடந்த 2005ம் ஆண்டு தேமுதிக கட்சியை துவங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2011 தேர்தலிலும் விருத்தாசலத்தில் தேமுதிக வெற்றிபெற்றது. விஜயகாந்த் இறப்புக்கு பின்னர் தற்போது, திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் திமுக கூட்டணியை ஆதரித்து தேமுதிக சார்பில் பிரசார பாடல் (வீடியோ), அக்கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலில் ஒன்று சேர்ந்தது ஒருமித்த சக்தி… இனி ஒளிவீசட்டும் தமிழ்நாட்டின் வெற்றி… முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்… நம் தமிழ் நாடும் வெல்லட்டும்… என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த பாடலுக்கு இடையே ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் பேசி வாக்கு சேகரிப்பதுபோன்ற வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளது. அதில் ‘தவசி’ படத்தின் சில அரசியல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்பாடல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

* பிரேமலதா காரில் சோதனை
பிரேமலதா நேற்று தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடிலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும்படையினர் பிரேமலதா வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் எதுவும் சிக்காததால், அனுப்பி வைத்தனர்.

* சேலம் மேற்கில் 5 ‘அருள்’: காலி செய்ய அன்புமணி ஸ்கெட்ச்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாமக ராமதாஸ் அணியின் எம்எல்ஏவாக இருப்பவர் அருள். இவர் ஏற்கனவே, தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேலம் மேற்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பாமகவும், மாம்பழம் சின்னமும் அன்புமணி தரப்பிற்கு சென்றதால், தனது வேட்புமனு தாக்கலின்போதே அருள் எம்எல்ஏ, பதிவு செய்யப்பட்ட கட்சியான அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறேன் என மனுதாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் பாமக அன்புமணி தரப்பில் மாநில ஒருங்கிணைப்பாளரான முன்னாள் எம்எல்ஏ கார்த்தி மாம்பழம் சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். அருள் எம்எல்ஏவிற்கு எரிவாயு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அருள் எம்எல்ஏவிற்கு கிலியை ஏற்படுத்த விரும்பிய பாமக அன்புமணி தரப்பு, மேலும் 4 அருள்களை களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சுயேச்சை வேட்பாளர்களாக சேலம் மேற்கு தொகுதியில் அருள் பெயர் கொண்ட 4 பேர் களம் கண்டுள்ளனர். இவர்களுக்கு வரிசையாக நீர்த்தொட்டி, கடிதப்பெட்டி, கிளிப், நூடுல்ஸ் கோப்பை ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அருள் எம்எல்ஏ சுயேச்சையாக களமிறங்கியிருந்தால், இந்த அருள்களோடு ஒருவராக வரிசையில் ஒரு பொது சின்னத்தில் வந்திருப்பார். ஆனால் அவர் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் பெயரில் வேட்பாளராக களம் இறங்கியதால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் சற்று முன்னதாக சென்றுவிட்டார். இருந்தாலும், வாக்காளர்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி, அருள் எம்எல்ஏவை காலி செய்துவிட வேண்டும் என வியூகம் வகுத்து அன்புமணி தரப்பு வேலையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: