தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் தனது பதவி காலத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அண்ணாமலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருவருக்கும் இடையேயான மோதல் வெடித்தது. அப்போது அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி ஒரு தற்குறி, கிணற்றுத்தவளை, கொலை வழக்கில் காட்டுப்பகுதிகளில் தலைமறைவாக இருந்தவர், அவர் என்னை பற்றி சொல்ல எந்த அருகதையும் கிடையாது என மிகவும் காட்டமாக பேசினார். இருவரும் மாறிமாறி விமர்சித்தனர். அந்த தேர்தலில் அதிமுக, பாஜ தனித்தனியாக நின்று படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு பாஜ மிகுந்த ஆர்வம் காட்டியது. கூட்டணி சேர வேண்டும் என்றால் அண்ணாமலையை பாஜ தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும். அப்போது தான் கூட்டணி சேர்வோம் என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட டெல்லி பாஜ, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக நியமித்தது.
இதையடுத்து பாஜவை எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் சேர்த்துக்கெண்டார். தற்போது வரை அண்ணாமலைக்கு கட்சியில் எந்தவித பொறுப்பும் கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சமரசம் செய்து கொண்டாலும் இருவருக்கும் இடையே மறைமுக மோதல் நீடித்து வருகிறது. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. கோவையில் அண்ணாமலை போட்டியிடுவார் என ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவருக்கு சீட் கொடுக்காத வகையில் மேலிடத்தில் கூறி எடப்பாடி பார்த்துக் கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இதனால் அண்ணாமலை கடும் கோபத்தில் இருக்கிறார்.
இதனிடையே, அண்ணாமலை பிரசாரத்தை தொடங்கிய நிலையில், இடைப்பாடி தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு அவர் வரவேண்டாம் என எடப்பாடி கூறிவிட்டதாக கூறப்படுகிறது.
அதை தாண்டியும் பிரசாரம் செய்தால், நான் பிரசாரம் செய்து தான் எடப்பாடியை ஜெயிக்க வைத்தேன் என சொந்தம் கொண்டாடுவார் என்பதால் பிரசாரத்திற்கு வரவேண்டாம் என கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக தொகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘அதிமுக பொதுச்செயலாளரை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை பேசியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இடைப்பாடி தொகுதிக்கு பிரசாரம் செய்ய வரவேண்டாம் என கூறிவிட்டோம். என்றாலும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பொதுக்கூட்டத்தில் இருவரும் சேர்ந்து பேச வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
* அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போஜராஜன் போட்டியிடுகிறார். இவரை, ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள நேற்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தார். அவர் கீழே இறங்கியவுடன் அங்கு தயாராக இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஏறி சோதனை மேற்கொண்டனர். ஆனால், சோதனையில் ரொக்கமோ, பரிசுப் பொருட்களோ கைப்பற்றப்படவில்லை.
* விஜய், சீமானை கணக்கில் சேர்க்காதீங்க…
அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் 91 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அசாமிலும் மிக அதிகப்படியான வாக்குப்பதிவு. காரணம் எஸ்ஐஆர்., மூலமாக வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது இயற்கையாகவே வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தி உள்ளது.இம்முறை யார் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இது பிங்கி பிங்கி பாங்கி போடும் தேர்தல் அல்ல. தவெக மற்றும் சீமான் களத்தில் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் அது இரு முனைப் போட்டியாகத்தான் இருக்கும். ஒன்று ஆளும் திமுக., மற்றொன்று அதிமுக., தலைமையிலான தே.ஜ. கூட்டணி’’ என்றார்.
