பாஜவின் சிலந்தி வலையில் ஈ போல சிக்கிய எடப்பாடி: இந்திய கம்யூ. தாக்கு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் தமிழ்நாட்டை காப்பதற்காக நடக்கக்கூடிய போராட்டம். வரிகளை அதிகமாக செலுத்தி வரும் தமிழ்நாட்டை தொடர்ந்து மோடி அரசு புறக்கணித்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை என்ற திட்டத்தை புகுத்தி மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது. இப்படிப்பட்ட அரசை எடப்பாடி பழனிசாமி ஆதரித்து வருகிறார்.

தமிழகத்தில் தனித்து நின்று காலூன்ற முடியாத பாஜ, அதிமுகவை வைத்தே தமிழகத்தில் வளர்ந்து விடலாம் என்று கணக்கு போட்டு வேலை பார்க்கிறது. பீகார் மாநிலத்தில் 20 ஆண்டு முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் பாஜவோடு கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஜெயித்த பின்னர் அவரை காலி செய்துவிட்டு பாஜ ஆட்சி நடத்தி வருகிறது. அதுபோல் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து எடப்பாடியை காலி செய்துவிட்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்யலாம் என பாஜ திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறது. இது தெரியாமல் எடப்பாடி சிலந்தி வலையில் சிக்கிய ஈ போல தவிக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

* இபிஎஸ்சுக்கு பாடம் புகட்டவே தனித்து போட்டி: கிருஷ்ணசாமி கெத்து
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நெல்லை, தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை நெல்லை தனியார் ஓட்டலில் நேற்று அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டசபை தேர்தலில், புதிய தமிழகம் கட்சி சார்பில் 61 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் சுமார் 90 லட்சம் பேர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் ஆதரவோடு புதிய தமிழகம் கட்சி களம் காண்கிறது. தனித்து போட்டியிடுவது புதிய தமிழகம் கட்சிக்கு புதிதல்ல.

எங்களோடு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவீர்கள் என எழுதி வாங்கிய பின்னரும் எங்களது கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. போட்டியிடாத தொகுதிகளில் எங்களது ஆதரவு யாருக்கும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தனித்து போட்டி ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக அமையுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு ஆவேசமடைந்த கிருஷ்ணசாமி ‘‘வாக்குகளை பிரிக்கவா நாங்கள் தேர்தலில் நிற்கிறோம்’’ என கொதித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கும், கிருஷ்ணசாமி, ஷியாம் கிருஷ்ணசாமி ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

* நடிப்பது தான் விஜய் வேலை… ஒன்றிய அமைச்சர் கிழி
திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். எங்களது கூட்டணி ஆட்சி அமைந்ததும் அதிகப்படியான முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழக இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பிரகாசமான எதிர்காலம் உறுதி செய்யப்படும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 9 தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் உலக சந்தை திருப்பூருக்கு திறந்து விடப்பட்டுள்ளது. திருப்பூரில் பிரமாண்டமான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

கடந்த 6 மாதமாக பருத்தி மீதான வரியை நிறுத்தி வைத்திருந்தோம். மீண்டும் வரியை நிறுத்தி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போது தேர்தல் காலம் என்பதால் உடனடியாக இதற்கு தீர்வு சொல்ல முடியாது. விஜய் எம்எல்ஏ ஆகிறாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சினிமாவில் அமிதாப்பச்சன் அல்லது ஷாருக்கான் போன்றவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு இயல்பானது. அதுபோலத்தான் விஜய்க்கு இருக்கும் ஈர்ப்பும். நடிப்பது நடிகரின் வேலை. ஆனால் நாட்டை நிர்வகிப்பது அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளின் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: