தேமுதிக பிரசார பாடலை வெளியிட்டார் பிரேமலதா: ஏஐ மூலம் திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கும் விஜயகாந்த்

விருத்தாசலம்: கடந்த 2005ம் ஆண்டு தேமுதிக கட்சியை துவங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து, 2011ம் ஆண்டும் விருத்தாசலத்தில் தேமுதிக வெற்றிபெற்றது. விஜயகாந்த் இறப்புக்கு பின்னர் தற்போது, திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், விருத்தாசலம் தொகுதியில் அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால், விருத்தாசலம் தொகுதியில் முரசு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியை ஆதரித்து தேமுதிக சார்பில் பிரசார பாடல் (வீடியோ), அக்கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலில் ஒன்று சேர்ந்தது ஒருமித்த சக்தி… இனி ஒளிவீசட்டும் தமிழ்நாட்டின் வெற்றி…, முரசு கொட்டட்டும்… ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்… நம் தமிழ் நாடும் வெல்லட்டும்… என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த பாடலுக்கு இடடையே ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் பேசி வாக்கு சேகரிப்பதுபோன்ற வீடியோ காட்சிகளும் பதிவாகியுள்ளது. அதில் ‘தவசி’ படத்தின் சில அரசியல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல் சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து பிரசாரங்களிலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே பிரசார களத்தில் இப்பாடல் ஒளிபரப்பப்பட்டு வருவதால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையேயும் இப்பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories: