சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டிற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ரூ.43,083 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டமன்ற பேரவை முன் வைத்து, பேசியதாவது:
2025-26ம் ஆண்டிற்காக இறுதி துணை மானிய கோரிக்கைகள் விளக்கி கூறும் விரிவாக அறிக்கையை இம்மாமன்றத்தின் முன் வைக்கின்றேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.43,082.99 கோடி நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில் ரூ.35,562.66 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.4,548.71 கோடி மூலதன கணக்கிலும் ரூ.2,97,162 கோடி கடன் கணக்கிலும் அடங்கும். அதன்படி,
* உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சார்பில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 2026ம் ஆண்டின் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.6,957.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்’ கீழ் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்குவதற்காக கூடுதல் நிதியாக ரூ.3,913.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 2025-26ம் ஆண்டில் உத்தரவாத மீட்பு நிதிக்கு மாற்றப்படுவதற்காக ரூ.3,086.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து இயற்கை எய்திய, ஓய்வுபெற்ற மற்றும் தன்விருப்ப ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஜூலை மாதம் 2023 முதல் மார்ச் மாதம் 2026ம் ஆண்டு வரையிலான ஓய்வுகால பணப்பலன்களை வழங்குவதற்காக மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு வட்டியில்லா வழிவகை முன்பணம் வழங்குவதற்கு ரூ.3,285.03 கோடி அரசு அனுமதித்துள்ளது.
துணை மதிப்பீடுகளில் ரூ.1,611.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதத்தொகை மானியத்தில் மறுநிதியொதுக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் 2025-2026ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் ஒப்புதல் செய்யப்பட்டது.
