×

கதர் சட்டைகள் கிழிவது புதிதல்ல: வைகோ கலாய்: தலைமை வார்த்தைக்காக சைலென்ட்டா போறேன்… பயம் காட்டும் காங். எம்.பி

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி தீவிரமடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலரது விமர்சனங்கள் பொதுமக்களிடம் மட்டுமின்றி, சொந்த கட்சியினரிடையேயும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து மோதல் முற்றிய நிலையில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைமை அதிரடியாக எச்சரித்தது.

அதே நேரம் மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக தனது எக்ஸ் தளத்தில் கூட்டணியை பாதிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வந்தார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை விடுத்திருந்தும், மாணிக்கம் தாகூர் தனது நடவடிக்கையை நிறுத்திய பாடில்லை. இவரது நடவடிக்கை குறித்து செல்வப்பெருந்தகை அகில இந்திய தலைவர் கார்கேவிடம் நேரடியாக சென்று புகார் அளித்திருந்தார். இதன்பிறகு கட்சி தலைமை மாணிக்கம் தாகூரை கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் எல்லாம் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவது போல் உள்ளது. நாங்களும் திருப்பி அடிப்போம் என்று அவர் பேசுவது, 2 பேர் சண்டை போட்டுக் கொண்டால் எப்படி பேசுவார்களோ அதுபோல் பேசுகிறார். அதனை அக்கட்சியினரே கண்டித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம். உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் 9 குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், மாணிக்கம் தாகூர் வழக்கம் போல நேற்றும் தனது எக்ஸ் தளத்தில் வைகோவின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘‘கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே’’ எனக் கூறியுள்ளார்.

கூட்டணி ஆட்சி, கூடுதல் சீட் என பேச்சுவார்த்தையில் பேச வேண்டியவற்றை பொதுவெளியில் பேசி கூட்டணிக்கள் சலசலப்பை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் சில மாதங்களாகவே தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவரது பேச்சு மற்றும் செயல் குறித்து மற்றவர்கள் விமர்சனம் செய்யும் போது அதை ஏற்காமல், அனைவர் மீதும் பாய்ந்து விழும் வகையிலான அவரது நடவடிக்கைகள் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Khadhir ,Vaiko Kalai ,Congress ,Tamil Nadu ,Manickam Thakur ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்