தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்தது கட்சியின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு யாரும் வருவார்கள் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை. கூட்டணி குறித்த முடிவுகளை எங்கள் தலைவர் விஜய் எடுப்பார். உரிய நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார். சேலத்தில் நடந்த உயிரிழப்பு வருந்தத்தக்க நிகழ்வு.
அவருக்கு ஏற்கனவே உடல்நல குறைவு இருந்துள்ளது. அதுகுறித்து தெரிந்ததால் தான் பொறுப்பேற்று கூறுகிறேன். மாநிலத்திலும், ஒன்றியத்திலும் உள்ள ஆளுங்கட்சிகள் தான் எங்கள் எதிரி என ஏற்கனவே துணிச்சலுடன் விஜய் கூறியுள்ளார். எவ்வளவோ வகையில் ஒன்றியத்தில் இருக்கும் ஆளுங்கட்சி எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்தார்கள்.
ஜனநாயகன் பட பிரச்னையில் சிபிஐ மற்றும் தணிக்கை வாரியம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் எங்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது அழுத்தத்திற்கு விஜய் அஞ்சாமல் தைரியமாக உள்ளார். இருந்தாலும் மதவாத கட்சியுடன் கூட்டணி இல்லை என்று விஜய் தெளிவாக சொல்லி இருக்கிறார். இவ்வாறு கூறினார்.
* நடிகர் கட்சி போனாலே மயக்கம் தான் போல…
மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் முனிஷ்குமார். தவெக இளைஞர் பாசறை நிர்வாகியான இவருக்கும், சுபஸ்ரீ என்பவருக்கும் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. மணமக்களை வாழ்த்துவதற்காக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலராளர் அருண்ராஜ் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அருண்ராஜ், மணமகனுக்கு சால்வை அணிவித்தார்.
அப்போது அருகில் நின்றிருந்த மணப்பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் மணப்பெண்ணுக்கு முதலுதவி செய்தனர். சரியாக சாப்பிடாததாலும், போதிய காற்றோட்டம் இல்லாததாலும் மணப்பெண் மயங்கி விழுந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.
முதலுதவிக்குப் பின் சிறிது நேரத்தில் மணப்பெண் இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்தச் சம்பவத்தால் அப்செட் ஆன நிலையில் அருண்ராஜ் அங்கிருந்து கிளம்பி சென்றார். தவெக தலைவர் பங்கேற்கும் கூட்டங்களில் ரசிகர்கள், தொண்டர்கள் மயங்கி விழுவது வழக்கம், அந்த கட்சியின் நிர்வாகி பங்கேற்ற திருமண விழாவில் மணமகளே மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
