தேர்தல் வந்துவிட்டால் எப்படியாவது தங்கள் தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டும் என அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதுதானே வழக்கம். ஆனால், சிவன் தொகுதி என்று திருவண்ணாமலை தொகுதியில் அதிமுகவின் நிலையோ தலைக்கீழாக உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை எந்த தேர்தலிலும் இலை துளிர்த்ததே இல்லை. இப்போது, இலையுடன் தாமரையும் சேர்ந்திருப்பதால் ஏற்கனவே வாங்கின ஓட்டுக்கும் உத்திரவாதம் இல்லை.
அதனால், எப்படியாவது இந்த தேர்தலிலும் கூட்டணிக்கு திருவண்ணாமலை தொகுதியை தள்ளிவிடலாம் என கணக்கு போட்டுள்ளதாக அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. திருவண்ணாமலை தொகுதியில் தொடர்ந்து திமுக அல்லது காங்கிரஸ் கட்சிகள்தான் வெற்றிபெற்றுள்ளன. ஒருமுறைகூட அதிமுக வென்றதில்லை. அதிமுக தொடங்கி எம்ஜிஆர் உச்சத்தில் இருந்த காலத்தில், அவருக்கு நெருக்கமானவராக இருந்த ப.உ.சண்முகமும் இரட்டை இலையில் நின்று 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியையே தழுவினார்.
எனவே, இந்த தொகுதி எப்போதும் அதிமுகவுக்கு ராசியில்லாத தொகுதியென முத்திரை குத்தப்பட்டுள்ளது. எனவே, இத்தொகுதியில் நேரடியாக களம் இறங்குவதை தவிர்த்து, 1991 மற்றும் 1996ல் காங்கிரசுக்கும், 2001ல் பாமகவுக்கும் இந்த தொகுதியை ஒதுக்கிவிட்டு அதிமுக ஒதுங்கிக்கொண்டது. அதன்பிறகு, கூட்டணிகளும் இந்த தொகுதியை விரும்பாததால், அதிமுக நேரடியாக போட்டியிட வேண்டிய நெருக்கடி.
ஆனாலும், 2006, 2011, 2016 என அடுத்தடுத்து தொடர்ந்து தோல்விகளையே கண்டது.அதோடு, இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவினரின் அரசியல் வாழ்வும் சரிவை சந்திப்பதால், இங்கு போட்டியிடுவது ‘ராசியில்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதனால், கடந்த 2021 தேர்தலில் பாஜகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதுபோல், இந்த தேர்தலிலும் வழக்கம் ேபால கூட்டணி கட்சிகளுக்கு திருவண்ணாமலையை ‘தள்ளிவிடலாம்’ என திட்டமிட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் போட்டியிட வேண்டும் என மாஜி மந்திரிகள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரிடம் எடப்பாடி நேரடியாக பேசியும் பயனில்லையாம். எனவே, கூட்டணி கட்சிகளிடம் எப்படியாவது திருவண்ணாமலையை கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என கெஞ்சாத குறையாக கேட்டு வருகின்றனர் என தொகுதிக்குள் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
* திருப்பதியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி சைலன்டாக திருப்பதிக்கு விசிட் அடித்தார். திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் கிடைக்கும் என எடப்பாடி நம்புகிறராம். அந்த வகையில் எடப்பாடி திருப்பதிக்கு சென்று வந்தாராம். பிப்.24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள், அன்றைய தினம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடியின் தீவிர விஸ்வாசி ஆகியோரின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த பட்டியலை வைத்து திருப்பதியில் வழிபாடு செய்தாராம். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு சீட் கொடுக்காமல் அல்லது கேட்ட தொகுதியை கொடுக்காமல் ‘கல்தா’ கொடுத்து விடுவாரோ? என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ரொம்பவும் ரகசியமாக எடப்பாடி வைத்துள்ளாராம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு கூட வேட்பாளர் பட்டியல் விவரங்கள் தெரியாதாம். அந்த அளவுக்கு சீக்ரெட்டாக உள்ளதாம்.
