×

கேரளாவில் பாஜ ஆக்‌ஷன் 90ல் 30 ரெடி: முட்டி மோதும் தலைவர்கள்

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் பாஜ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 90 தொகுதிகளில் போட்டியிட இக்கட்சி தீர்மானித்துள்ளது. பாஜ கூட்டணியில் பிடிஜேஎஸ் என்ற ஒரு கட்சி மட்டுமே முக்கியமாக உள்ளது. இந்தக் கட்சி மீதமுள்ள 50 தொகுதிகளில் போட்டியிடும்.

பாஜவில் 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் 30 தொகுதிகளுக்கான பட்டியல் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜ மாநில தலைவரான ராஜீவ் சந்திரசேகர் தான் திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் தொகுதியில் போட்டியிடப் போவதாக ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்திருந்தார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வட்டியூர்க்காவு தொகுதிக்குத் தான் பாஜவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் பெண் டிஜிபி ஸ்ரீலேகா தனக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று கருதியிருந்தார். ஆனால் அவருக்கு மேயர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக இவர் கட்சியை விட்டு ஒதுங்கியே இருக்கிறார்.

சமீபத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜ கவுன்சிலர்கள் உள்பட கேரளாவில் வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றனர். அப்போது அவர்களுடன் ஸ்ரீலேகா செல்லாமல் மோடி சந்திப்பு நிகழ்ச்சியை புறக்கணித்தார்.

இதனால் ஸ்ரீலேகாவுக்கு வட்டியூர்க்காவு தொகுதியில் வாய்ப்பு வழங்கி அவரை சமாதானப்படுத்த பாஜ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதே தொகுதியில் போட்டியிட பாஜ மூத்த தலைவர்களான ஷோபா சுரேந்திரன், பத்மஜா வேணுகோபால் மற்றும் நடிகர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முட்டி மோதுவதாக கூறப்படுகிறது. எனவே யாருக்கு இந்தத் தொகுதியை ஒதுக்குவது என தெரியாமல் பாஜ தலைமை திணறி வருகிறது.

Tags : BJP ,Kerala ,PDJS ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்