×

தகுதிச்சான்று கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைப்பு லாரிகள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு: முதல்வருக்கு சம்மேளன தலைவர் நன்றி

சேலம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத்தலைவர் தனராஜ் சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் வரையுள்ள அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச்சான்று கட்டண உயர்வு டிசம்பர் 17ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதில் 15 ஆண்டுக்கு மேலான ஒரு லாரிக்கு ரூ.14,500 என்றும், 20 ஆண்டுகளுக்கான லாரிக்கு ரூ.28,200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக இக்கட்டண உயர்வால் தகுதிச்சான்று பெற முடியாமல் ஒரு லட்சத்திற்கும் மேலான வாகனங்கள் காத்திருக்கின்றன. கடந்த 17ம் தேதி நடந்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டத்தில் வரும் 25ம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட எட்டு மணி நேரத்திற்குள் கடந்த 17ம் தேதி உள்துறை செயலகத்திலிருந்து 3 மாதங்களுக்கு தகுதிச் சான்றுக்கான புதிய கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பழைய கட்டணம் ரூ.800 மட்டும் செலுத்தி தகுதிச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசாணை பிறக்கப்பட்டது. இதனால், எங்களது காலவரையற்ற லாரிகள் ேவலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். எனவே மாநிலம் முழுவதும் லாரிகள் வழக்கம்போல் இயங்கும். பழைய கட்டணத்தை வசூலிக்க ஆவன செய்த முதல்வருக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்து ஆணையருக்கும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு தனராஜ் கூறினார்.

Tags : Chief Minister ,Salem ,Tamil Nadu Lorry Owners Association ,president ,Dhanaraj ,
× RELATED கோடைகால விடுமுறை பயணத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்