சென்னை: சட்டப்பேரவையில் இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: வேளாண் பட்ஜெட்டை குறை சொல்ல முடியாமல் இருந்த எதிர்க்கட்சியினர் தேர்தலை மனதில் வைத்து குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை 28 கருத்து கேட்பு கூட்டங்கள் மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு, வேளாண் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. 652 அறிவிப்புகளை செயல்படுத்தி உள்ளோம்.
மண்ணுக்கு ஏற்ற விவசாயத்தை அறிமுகம் செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் 102 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளால திமுக ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை. இந்த ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். காரணம் வெள்ளம், புயல் பாதித்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நேரில் சென்று பார்வையிடுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று தண்ணீரை திறந்து விடுகிறார். அதிமுக ஆட்சியில் முதல்வர் ஒரு முறையாவது நேரில் சென்றது உண்டா? முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளை மதிக்கிறார். அதனால் நேரடியாக சென்று பார்க்கிறார். இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர்களது கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட் பதிலுரையை புறக்கணித்து உள்ளனர்.
காரணம் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இந்த அரசு செய்த சாதனைகளை கேட்பதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. அதனால் தான் சட்டமன்றத்தை அவர்கள் புறக்கணித்து உள்ளார்கள். 2026ல் சட்டமன்றத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள். நாம் தான் இருப்போம். முதலமைச்சரின் ஆட்சி காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 2026ல் நடைபெறும் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தான் ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
