தொகுதி பங்கீடு குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நிறைய பேர் போட்டியிட ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டி யிட விரும்புகின்றவர்கள் தலைமை அலுவலகத்தில் வரும் 23ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனு அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டி: விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளே பெரும் எழுச்சியை பார்க்க முடிகிறது. இந்த எழுச்சியை பார்க்கையில் ஒரு மகத்தான வெற்றியை பெறுவோம் என உறுதியாக நம்புகிறோம். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. எல்லா கட்சிகளைப் போலவும் பாஜவும் அதிக சீட்தான் கேட்கும். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும். தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும். மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை. 25 வருடம் வெற்றியைக் கொடுத்தது ராயபுரம் தொகுதி மக்கள். எனக்கு எப்போதும் ராயபுரம் தான். வெற்றியோ தோல்வியோ நான் எங்கும் எந்த கட்சிக்கும் மாறவில்லை என்பதை ஏற்கனவே கூறிவிட்டேன். பிரிந்து சென்றவர்களை இணைப்பதைப் பற்றி நான் முடிவெடுக்க முடியாது. தலைமைதான் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: