அமமுக சேரும் அணி வெற்றி பெறும் யாருடன் கூட்டணி என்று பிப்.23ம் தேதி அறிவிப்பு: டிடிவி.தினகரன் பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேஜ கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் வந்து இணையும் வாய்ப்புள்ளது என நயினார்நாகேந்திரன் தெரிவித்திருப்பது அவருடைய கருத்து. அமமுக நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் ஒன்றரை மாதத்தில் புரிந்து கொள்வீர்கள். வரும் பிப்ரவரி 23ம் தேதி எங்கள் கூட்டணி குறித்த விபரத்தை உறுதியாக தெரிவிப்பேன். அமமுக இடம் பெறும் கூட்டணி தான் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். இதை அதீத நம்பிக்கையில் கூறவில்லை. தற்போதைய அரசியல் நிலவரத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதை முழுமையாக தெரிந்து தான் தெரிவிக்கிறேன்.

கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் என்பது வேறு. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் என்பது வேறு. அதனால் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சட்டமன்ற தேர்தலை பாதிக்காது என்றுதான் கூறுவார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதி அரசரை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அரசியலை கடவுள் பெயரால், மதம் ஜாதியின் பெயரால், மக்களை பிரிக்கும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. சகோதரத்துவத்துடன் அண்ணன், தம்பி, தங்கை என ஒரே குடும்பமாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைய வேண்டும் என்றுதான் கூறினேன். அவர்கள் ஒரே கட்சியில் இணைய வேண்டும் என கூறவில்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் சரியான பதிலை, முடிவை மக்கள் தெரிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: