விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுகவிடம் தோற்றதால் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வரும் தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட முடிவெடுத்துள்ளார். அதன்படி மயிலம் தொகுதியில் போட்டியிட அதிமுகவில் நேற்று விருப்பமனு அளித்துள்ளார். அதிமுகவில் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக வலம் வருபவர் சி.வி.சண்முகம். வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு தலைமை ஏற்பதுபோல் செயல்பட்டு வருவதாக கூறப்படும் சி.வி.சண்முகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் படுதோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அதிமுகவில் ஏற்கனவே 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் திண்டிவனத்தில் வென்ற சி.வி.சண்முகம் அமைச்சராகவும் பதவி வகித்தவர். தொடர்ந்து, 2011, 2016 தேர்தல்களில் சி.வி.சண்முகத்தை தொகுதி மாறி விழுப்புரத்தில் போட்டியிட ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம் தொகுதியில் 10 ஆண்டு காலம் அமைச்சர், எம்எல்ஏவாக நீடித்தார்.
இந்த நிலையில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் விழுப்புரத்தில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் படுதோல்வி அடைந்தார். சி.வி சண்முகத்தை சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லட்சுமணன் வெற்றிபெற்றார். சி.வி. சண்முகத்தின் தொடர் வெற்றிக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்தது.
இனியும் விழுப்புரத்தில் திமுகவுடன் மோதி ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் தனது சொந்த கிராமமான அவ்வையார் குப்பத்தை உள்ளடக்கிய மயிலம் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இதற்காக அந்த தொகுதியில் இளைஞர்கள், பொதுமக்களை கவரும் வகையில் பல திட்டங்களை எம்பி நிதி மற்றும் சொந்த நிதியில் சி.வி.சண்முகம் செய்து வருவதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் மயிலம் தொகுதியில் போட்டியிட சி.வி.சண்முகம் சார்பில் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். அங்கும் அவரை வீழ்த்துவதற்கு திமுகவில் பலமான வேட்பாளர் நிறுத்த கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
