தேமுதிக யாருடன் கூட்டணி? கடலூர் மாநாட்டில் அறிவிப்பு: பிரேமலதா தகவல்

நாமக்கல்: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து, கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்று பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிகவின் வளர்ச்சி குறித்து, மாவட்டந்தோறும் சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்தாண்டு முழுவதும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்படும். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என அறிவிப்போம். 234 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, நானும், விஜய பிரபாகரனும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

பெண்களை தவறாக பயன்படுத்தும் நிலை மாறவேண்டும். இதற்கு மது, கஞ்சா, போதை தான் காரணம். பெண்கள் மீதான குற்றங்களில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும்போதுதான் நிலைமை மாறும். அரக்கோணத்தில் இளம்பெண் பாலியல் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு தற்போது முன்ஜாமீன் கிடைத்தாலும், தப்பு செய்தவருக்கு தண்டனை நீதிமன்றத்தில் நிச்சயம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தேமுதிக யாருடன் கூட்டணி? கடலூர் மாநாட்டில் அறிவிப்பு: பிரேமலதா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: