பாமகவில் நெருக்கடியான சூழல்: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி


திண்டிவனம்: ‘பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பது உண்மைதான்’ என்று கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். தைலாபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டத்தை முடித்தபின் நழுவிய கவுரவ தலைவர் ஜி.கே.மணி, நேற்று பாமக மகளிரணி, மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு கட்சி என்றால் உட்கட்சியில் சில பிரச்னைகள், சலசலப்பு வருவது, நெருக்கடிகள் வருவது இயல்புதான். எல்லா கட்சியிலும்கூட உள்ளது. இப்படி பாமகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது. நான் மறைத்து பேச விரும்பவில்லை, உருவாகி இருக்கிறது. பாமக என்பது ஒரு குடும்ப பாசத்தோடு இருக்கிற கட்சி.

ஒரு நெருக்கடி ஏற்பட்டால்கூட மிக விரைவில் சுமுகமாக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உதாரணத்துக்கு ராமதாசிடம் நேற்று இரவு வரை நான் பேசினேன். அன்புமணியிடம் இரவும் பேசினேன், காலையிலும் பேசினேன். அதனால என் ஆசை, நோக்கம் எல்லாம் ஒரு சுமுகமான தீர்வு விரைவில் வரணும். பாமக வலிமை மேலும் அதிகரிக்கணும். மிக விரைவில் வலிமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை எல்லாம். அதற்குண்டான முயற்சிகளை எடுக்கிறோம். ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்னையை சுமுகமாக தீர்க்க நான் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் வரப்போகிறது. இருவரும் விரைவில் ஒன்றாக சந்திக்கத்தான் போகிறார்கள்.

நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, பாமக தலைவராக அன்புமணி நீடிக்கிறாரா, இல்லையா, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் நிறையபேர் கூட்டத்திற்கு வராமல் இருந்துள்ளார்கள். இது ராமதாசை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஜி.கே.மணி, ‘இது உட்கட்சி பிரச்னை. இதை மேலும் மேலும் பெரிதுபடுத்தக் கூடாது, அது நல்லதாக இருக்காது என்பதே எனது கருத்து. தேர்தல் வரும் போகும், வெற்றியும், தோல்வியும் மாறிமாறி வரும். ஒரு கட்சி தேர்தலுக்காக எதையும் பேசுவது கிடையாது. கூட்டணி தொடர்பான முரண்பாடு இல்லை. இருவரும் பேசிதான் முடிவு செய்வார்கள். ஒன்றுமட்டும் உறுதியாக சொல்கிறேன். தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக இருவரும் சந்தித்து பேசுவார்கள், நல்ல கூட்டணியை அமைப்பார்கள்.

பாமக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற நிலையை பாமக உருவாக்கி காட்டும். அந்த நம்பிக்கையில் முன்னெடுத்து செல்கிறோம். ஜி.கே.மணியை பொறுத்தவரை உண்மையாக இருப்பேன், மனசாட்சியுடன் செயல்படுவேன். எந்த அணி எப்படி உருவாகும் என இப்போதே ஆரூடம் எல்லாம் சொல்ல முடியாது. தேர்தல் வரும் போதுதான் கூட்டணி பேசுவோம். எங்கள் கட்சி வலிமையான ஒரு அதிகாரத்தில் செல்ல வேண்டும் என்றுதான் நாங்கள் நினைப்போம். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்று பதில் அளித்தார்.

‘கத்தி எடுத்து குத்தி என்னை கொலை செய்யுங்க’: டென்ஷனான ஜி.கே.மணி
தந்தை- மகன் இடையிலான கருத்து மோதலுக்கு நீங்கள்தான் முக்கிய காரணம் என்று சொல்கிறார்களே? என்று நிருபர் கேட்டதற்கு, டென்ஷனுடன் பதிலளித்த ஜி.கே. மணி, இப்ப ஒரு விஷம் இருக்கிறதல்ல. அதை கொண்டு வந்து அவரது கையில் (நிருபரிடம்) கொடுங்கள். இல்லையென்றால் ஒரு கத்தியை கொண்டுவந்து கொடுங்கள். அவர் என்னை குத்தி கொலை பண்ணட்டும். இது எவ்வளவு மோசமான கேள்வி. இதையெல்லாம் எப்படி நீங்கள் கேட்கிறீர்கள்? என்றார். மேலும் என்னை பொறுத்தவரை ஒரு சின்ன உயிருக்குகூட கெடுதல் செய்யக் கூடாது என நினைக்கிறவன். 45 வருஷமாக நான் இங்கு இருக்கிறேன்.

சாதாரண தொண்டனில் இருந்து யாரிடமாவது மனசாட்சியை தொட்டு இந்த கேள்விக்கு பதில் கேளுங்கள். ஜி.கே. மணி இப்படி தவறு பண்ணுவாரா? என்று மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். ஏன்? இந்த கேள்வியை கேட்கிறீர்களே?, நீங்களே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். இப்படி செய்வேனா? எனத் தெரிவித்த ஜிகே மணி, அப்படியென்றால் நான் பாமகவில், வன்னியர் சங்கத்தில் இத்தனை வருஷமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லையே என்றார். மேலும் எம்ஜிஆர், கலைஞர், புரட்சித்தலைவி காலத்தில் இருந்தெல்லாம் என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் வந்தது என்று நான் சொல்லக்கூடாது. அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் பாமகவில் இருக்கிறேன் என ஆவேசத்துடன் கூறினார்.

The post பாமகவில் நெருக்கடியான சூழல்: ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: