மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் செவிலியர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

வேலூர், மே 13: 1854ம் ஆண்டு கிரீமிய போரில் படுகாயமடைந்த போர் வீரர்களை மீட்டு, அவர்களுக்கு இரவு நேரங்களிலும் கைகளில் விளக்கேந்தி சிகிச்சை அளித்து, போர்க்களத்தில் அந்த வீரர்களால் கை விளக்கேந்திய காரிகை என்று அழைக்கப்பட்ட, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி செவிலியர் பயிற்சிப்பள்ளியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவை டீன் ரோகிணிதேவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘செவிலிய மாணவர்கள் தங்கள் பணிக்காலத்தில் நோயாளிகளுக்கு கனிவுடன் சேவையாற்ற வேண்டும். மருத்துவமனையின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் செவிலியர்களே. இவ்வாறு முதுகெலும்பாக திகழும் நீங்கள் நோயாளிகளுக்கு அன்புடன் மருந்து, மாத்திரிகளை உரிய நேரத்தில் கனிவுடன் வழங்க வேண்டும். நீங்கள் படிக்கும் காலத்தில் கைபேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நடந்த பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அனைவரும் உலக செவிலியர் தின உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதி திலகம், ஏஆர்எம்ஓ கீதா, செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் நாகம்மாள், துணை முதல்வர் ரகுபதி, செவிலியர் கண்காணிப்பாளர் செல்வி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மாவட்டத்தில் வேலூர் பென்ட்லண்ட் மருத்துவமனை, குடியாத்தம், பேரணாம்பட்டு, அணைக்கட்டு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர்.

The post மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் செவிலியர்கள் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு உலக செவிலியர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: