இபிஎப் சந்தாதாரர் குறைதீர்வு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது வேலூர் உட்பட 4 மாவட்டங்களில்

வேலூர், மே 24: வேலூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் மயங்க்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நிதி ஆப்கே நிகட் 2.0 என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 எனும் இபிஎப் சிறப்பு குறைதீர்வு முகாம் தமிழகம், புதுச்சேரியில் 10 இடங்களில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் அலுவலகம் சார்பில் வேலூர் சங்கரன்பாளையத்தில் இஎஸ்ஐ கிளை அலுவலகத்திலும், ராணிப்பேட்டையில் சிப்காட் சிஎஸ்ஐ பள்ளியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் பூந்தோட்டம் இஎஸ்ஐ கிளை அலுவலகத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு டிடிசிசி வங்கி கிளை அலுவலகத்திலும் நடக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில் இபிஎப் அண்ட் எம்பி சட்டம் 1952ன் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விளக்குதல், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றி விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகளை விளக்குதல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட உள்ளது.

மேலும், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை களைதல், ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல், யுஏன், கேஒய்சிகளை இணைப்பதற்கான உதவி, இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் பங்குபெற விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை கூகுள் பார்மில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இபிஎப் சந்தாதாரர் குறைதீர்வு முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Related Stories: