திருப்போரூர், மே 22: திருப்போரூர் புறவழிச்சாலையில் தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த, புறவழிச்சாலையின் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதால், தற்போது போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, 24 மணி நேரமும் கனரக வாகனங்கள், கல்லூரி வாகனங்கள், வேன், கார்கள் என அனைத்து வாகனங்களும் இந்த புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இது மட்டுமின்றி கேளம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் நோக்கி நேரடியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாக செல்கின்றன.
இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடமாக இச்சாலை மாறி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இச்சாலையில் தனியாக மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும், இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட திருப்போரூர் காவல்துறை சார்பில் புறவழிச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவிலும் அடையாளம் தெரியும் வகையில், இந்த கேமராக்கள் நான்கு திசைகளிலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த, கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை காவல் நிலைய ஆய்வாளரின் செல்போனில் இருந்து பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
The post திருப்போரூர் புறவழிச்சாலையில் தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க நவீன சிசிடிவி கேமராக்கள் appeared first on Dinakaran.