மதுராந்தகம், மே 17: கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ரேஷன் கடைகளின் முன்பாக பந்தல் அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மதுராந்தகம் வட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஒருமணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்லும் சூழல் உள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பெண்கள், முதியோர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க முடியாமல் பரிதவிக்கின்றனர். உடல்நிலை பாதித்தோர் மயங்கிவிழும் சம்பவங்களும் நிகழ்கிறது. எனவே, பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ரேஷன் கடைகளுக்கு எதிரில் தென்னங்கீற்று பந்தல்கள் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
The post ரேஷன் கடைகளின் முன்பு பந்தல் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.