பரனூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு சம்பவம் பாஸ்டேக்கிற்காக நின்ற லாரி கடத்தல்:  சினிமா பாணியில் 15 கி.மீ விரட்டி மடக்கிய போலீசார்  கைதானவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா ?

செங்கல்பட்டு, மே 21: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவருக்கு சொந்தமான லாரியை திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில், செங்கல்பட்டு பகுதியில் இருந்து நேற்று காலை சுமார் 10 மணி அளவில் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் லாரி வந்தபோது, பாஸ்டேக் (fastag) போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து லாரியை ஓரம் கட்டிய டிரைவர் கமலக்கண்ணன் உடனடியாக இதுகுறித்து உரிமையாளருக்கு தகவல் ெகாடுத்தார். தொடர்ந்து, பாஸ்ட்டேக்கில் ரீசார்ஜ் செய்வதற்காக காத்திருந்தார்.இந்நிலையில், சுங்கச்சாவடி அருகே இருந்த மர்ம நபர் ஒருவர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திடீரென லாரியில் தொங்கிக் கொண்டிருந்த சாவி மூலம் லாரியை இயக்கி உள்ளார். மேலும், லாரியை எடுத்து, சென்னையை நோக்கி அதி விரைவாக ஓட்டத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத லாரி டிரைவர் கமலக்கண்ணன் உடனடியாக இதுகுறித்து, அருகில் இருந்த காவலரிடம் கத்தி கூச்சலிட்டு தெரிவித்துள்ளார்.

அப்போது, ரோந்து பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக இந்த தகவல்களை அருகில் இருந்த காவலர்களுக்கு வாக்கி டாக்கி வழியாக பரிமாறி உள்ளனர். மகேந்திரா சிட்டி சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்த போக்குவரத்து போலீசார் பாலமுருகன், லோகேஷ் காந்தி, மோகன் உள்ளிட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து, லாரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் லாரியை முடியவில்லை. இதனிடையே, அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டியின் பின்னால் கமலக்கண்ணன் லிப்ட் கேட்டு அமர்ந்து இருவரும் லாரியை பின்தொடர்ந்தனர். அப்போது, லாரி மீது ஏறி நிறுத்த முயற்சி செய்துள்ளார்.

ஒருபுறம் இருசக்கர வாகனத்தில் போலீசார் லாரியை வேகமாக பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, மகேந்திரா சிட்டி சிக்னல் அருகே பணியில் இருந்த போக்குவரத்து காவலர் முருகன் லாரியின் மீது லாவகமாக ஏறி, தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தூரம் லாரியில் தொங்கியபடியே சென்று, கடத்தி செல்லப்பட்ட லாரியை நிறுத்த முயற்சி செய்தார். அப்போது, டிரைவரை லாரியிலிருந்து கீழே இறக்கவும் முயற்சி செய்தார். ஒரு வழியாக மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி சாலை பாதுகாப்பு இரும்பு தடுப்புவேலியை உடைத்துக்கொண்டு சிமென்ட் கட்டையில் மோதி நின்றது.

லாரியை நிறுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்றேபோது போலீசார் சுற்றி வளைத்து டிரைவரை கைது செய்தனர். இதில் லாரியை கடத்தி வந்த நபர் இடுப்பில் துண்டு மட்டுமே கட்டி இருந்ததை அங்கிருந்த போலீசாரும் மற்றவர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சினிமா பாணியில் துரத்தி சென்று சம்பந்தப்பட்ட மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாறுமாறாக ஓடிய லாரி பொதுமக்களை, இடித்து தள்ளும் விதத்தில் ஓடியது குறிப்பிடத்தக்கது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

லாரி தடுப்பின் மீது மோதி நின்றபோது, காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களும் லாரியில் இருந்த டிரைவரை பிடிக்க உதவி செய்தனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை கடத்தியவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் (35) என்பதும், இவர் கடந்த இரண்டு நாட்களாக செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று சுற்றி திரிந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்சில் வைத்து சுபாஷிடம் செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிறகு லாரியை கடத்திய சுபாஷ்சை சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசுக்கு பாராட்டு
சென்னை புறநகர் பகுதியில் பட்டப்பகலில் லாரி கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஒருபக்கம் என்றாலும், சினிமா பாணியில் கடத்திச் சென்ற லாரியை துரத்திச் சென்று பிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது மறைமலைநகர் பகுதியில் நிற்கும் லாரியில் இருந்து ஜல்லி கற்களை மாற்று லாரியில் கொட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் போலீசார் முழு வீச்சுடன் ஈடுபட்டனர்.

பெண்களிடம் வழிப்பறி: டீக்கடையில் ரகளை
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், லாரியை கடத்திய நபர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரகாலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றி திரிந்து வந்த சுபாஷ் பரனூர் சுங்கச்சாவடி அருகே உள்ள கோயில் ஒன்றின் உள்ளே புகுந்து கோயில் கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை சூறையாடி உள்ளார். மேலும் நேற்றுமுன்தினம் மாலை சுங்கச்சாவடி அருகே தனியாக நடந்து சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபடவும் முயற்சித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடைக்கு சென்ற சுபாஷ் ரூ.20 கொடுத்து பால் வாங்கி குடித்துள்ளார். பின்னர் மீண்டும் மதியம் அதே கடைக்கு வந்த சுபாஷ், குடிப்பதற்கு மோர் கேட்டுள்ளார்.

மோரை குடித்தவுடன் இலங்கை நாணயத்தை எடுத்து கடையில் இருந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். இலங்கை நாணயம் இந்தியாவில் செல்லாது, அதனால் இந்திய நாணயத்தை தருமாறு கடையில் இருந்த பெண் சுபாஷிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுபாஷ் கடையில் கொதிக்க கொதிக்க வைத்திருந்த பாலை எடுத்து கடையில் இருந்த பெண் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து துரத்திச் சென்று ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ஊரப்பாக்கம் தேவ அன்னை பள்ளி அருகே சுபாஷை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சுபாஷ் மனநலம் பாதிக்கப்பட்டது போன்று தொடர்ந்து பேசியதால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

The post பரனூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு சம்பவம் பாஸ்டேக்கிற்காக நின்ற லாரி கடத்தல்:  சினிமா பாணியில் 15 கி.மீ விரட்டி மடக்கிய போலீசார்  கைதானவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? appeared first on Dinakaran.

Related Stories: