சுற்றுலா பயணிகள் வசதிக்கென மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மாமல்லபுரம், மே 23: சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வருகின்றனர். அவர்கள், புராதன சின்னங்களான புலிக்குகை, வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்து தங்களது செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்கின்றனர். தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர். அவர்கள், புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து விட்டு போதிய பேருந்துகள் இல்லாததால் குறித்த நேரத்திற்குள் வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கின்றனர்.

ஒரு சிலர், கால்டாக்சி புக் செய்து அதிக பணம் கொடுத்து வீட்டிற்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் செங்கல்பட்டு, தாம்பரம், அடையாறு, பிராட்வே, திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கவனக்குறைவால் கடந்த சில மாதங்களாக மாமல்லபுரத்துக்கு குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும், என்றனர்.

The post சுற்றுலா பயணிகள் வசதிக்கென மாமல்லபுரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: