திருப்போரூர், மே 23: பையனூர் கிராமத்தில் ‘கலைஞர் திரைப்பட நகரம்’ கட்டுமான பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பையனூர் கிராமத்தில் தமிழ்நாடு திரைப்பட பிரிவினருக்கு 100 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த, இடத்தில் `கலைஞர் திரைப்பட நகரம்’ என்ற பெயரில் பிரம்மாண்ட ஸ்டூடியோ, பெப்சி தொழிலாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கான குடியிருப்புகள், படப்பிடிப்பு பூங்கா ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. மேலும், சினிமா தொழிலாளர்களுக்கு வீட்டு மனைகளை குத்தகை அடிப்படையில் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘கலைஞர் திரைப்பட நகரம்’ பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, துணை தலைவர் செந்தில், இயக்குநர் பேரரசு ஆகியோர், அரசு வழங்கிய நிலத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.
The post ‘கலைஞர் திரைப்பட நகரம்’ கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.