நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு: விவசாயிகள் வேதனை

பெரும்புதூர், மே 17: பெரும்புதூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்ற நெல் மூட்டைகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம், பிச்சிவாக்கம் ஊராட்சி, பட்டுமுடையார்குப்பம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர், அறுவடை செய்த நெல் மூட்டைகளை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்துள்ளனர். சுமார் 60க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து தலா 50 மூட்டைகள் வீதம், அதிகாரிகள் கொள்முதல் செய்துள்ளனர். கடந்த, மார்ச் 29ம்தேதி கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 40 நாட்களை கடந்தும், நெல் மூட்டைகளை விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதன் காரணமாக, அடுத்த போகம் நெற்பயிர் சாகுபடி செய்ய விதைகள் வாங்க முடியாமலும், வயலில் உழவு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: