செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்

அச்சிறுப்பாக்கம், மே 22: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக பாடநூல் கழகம் சார்பில், வரும் கல்வி ஆண்டுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அனுப்பும் பணியில் அனைத்து மாவட்ட அலுவலர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தங்கள் பெறப்பட்டு, கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 1 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு தேறும் சீருடை, நோட்டு புத்தகம், பை, காலணி, சைக்கிள் உள்ளிட்டவை விலையின்றி வழங்கப்படுகின்றன.

அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் புத்தகக் கிடங்கலிருந்து தொடக்க பள்ளிகளுக்கான புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகத்துக்கும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான புத்தகங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை அங்கிருந்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்ள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கல்வி அலுவலர்கள் கூறும்போது, ‘அனைத்து பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவசப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பாடப் புத்தகங்களை பெற்றச் செல்கின்றனர். வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் விநியோக்கப்படும்’ என்றார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: