பல்லாவரம், மே 22: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், எம்.ஜி.ஆர் நகர், சாந்தி நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. அவற்றில், 600க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி அவற்றை காலி செய்யக்கூறி அரசு சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், அவர்களுக்கு மாற்று இடங்களும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டு பலர் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, அரசு வழங்கிய அடுக்குமாடி குடியிருப்பிற்கு இடம் பெயர்ந்து சென்ற நிலையில், ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து தங்களது இடத்தை காலி செய்யாமல் இருந்து வந்தனர். எனவே, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
அதன், ஒரு பகுதியாக நேற்று முன்தினம் சுமார் 10 வீடுகள் வரை இடித்து அகற்றப்பட்டன. பின்னர், மாலையில் கனமழை பெய்ததால் இடிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்தது. இதனால், அங்கு பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் அரசு வழங்கும் மாற்று இடத்திற்கு செல்லாமல், தொடர்ந்து அங்கேயே கூடி இருந்து அழுது புலம்பி வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் 2வது நாளாக நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: கண்ணீர்விட்டு கதறிய பெண்கள் appeared first on Dinakaran.