லாரி மீது ஆட்டோ மோதி பாட்டி, பேத்தி பரிதாப பலி

பூந்தமல்லி, அக்.24: உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பும்போது தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே லாரி மீது ஆட்டோ மோதியதில் பாட்டி மற்றும் பேத்தி பரிதாபமாக பலியாகினர்.
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் வெண்ணிலா (45), இவர் தனது மகள்கள் மற்றும் பேத்தி விரோனிக்கா (5) ஆகியோருடன் தாம்பரத்தில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று மாலை ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்ேபாது, தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே சென்றபோது சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் வெண்ணிலா மற்றும் இவரது மகள்கள், பேத்தி மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெண்ணிலா மற்றும் அவரது பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோவில் சென்ற மற்றவர்கள் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன பாட்டி மற்றும் பேத்தியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பாட்டி மற்றும் பேத்தி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post லாரி மீது ஆட்டோ மோதி பாட்டி, பேத்தி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: