புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குழாய் இணைப்பு பணி 5 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் தகவல்

சென்னை: புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 5 மண்டலங்களில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை மேற்கொள்வதால் இன்று (23ம் தேதி) காலை 8 மணி முதல் 24ம் தேதி மாலை 4 மணி வரை (32 மணி நேரம்) மண்டலம் 4, 5, 6, 8, மற்றும் 9க்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் (பகுதி), பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ், திருவல்லிக்கேணி (பகுதி) ஆகிய இடங்களில், குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குழாய் இணைப்பு பணி 5 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: