காதலன் பேசாமல் இருந்ததால் பிளேடால் அறுத்துக்கொண்ட மாணவி: மர்ம நபர்கள் அறுத்ததாக நாடகம்

பூந்தமல்லி: பிளேடால் மர்ம நபர்கள் அறுத்ததாக கல்லூரி மாணவி அளித்த புகாரில், திடீர் திருப்பமாக காதலன் பேசாமல் இருந்ததால், மாணவி தன்னைத் தானே அறுத்துக்கொண்டு, நாடகம் ஆடியது தெரியவந்தது. கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தன்னை பிளேடால் கிழித்து விட்டு தப்பி சென்றதாக, அருகில் உள்ள மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது, பெற்றோரிடம் இதையே கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் ராமாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் அதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என தெரியவந்தது. தீவிர விசாரணையில் இந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த நபர் கடந்த சில தினங்களாக மாணவியிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் காதலன் தன்னிடம் பேச வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே பிளேடால் கிழித்துக்கொண்டு மர்ம நபர்கள் பிளேடால் கிழித்ததாக நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது.

The post காதலன் பேசாமல் இருந்ததால் பிளேடால் அறுத்துக்கொண்ட மாணவி: மர்ம நபர்கள் அறுத்ததாக நாடகம் appeared first on Dinakaran.

Related Stories: