2 மாணவிகள், பாட்டி பாலியல் பலாத்காரம்

ஓமலூர்: சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பழக்காரனூர் குட்டப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (26). இவர் மேச்சேரி-ராசிபுரம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த பஸ்சில் சேலம் தனியார் கண் மருத்துவமனையில் முதலாமாண்டு நர்சிங் படித்து வரும் தாரமங்கலத்தை சேர்ந்த 17 வயது மாணவி ரெகுலராக பயணித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் கண்டக்டர் பழனிசாமி நெருக்கமாக பேசி பழகியுள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை 6 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு மாணவி வந்துள்ளார். அங்கு வந்த பழனிசாமி, மாணவியை அழைத்துக் கொண்டு அயோத்தியாப்பட்டினத்தை அடுத்த கருமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் அந்த மாணவியை அவரது வீட்டின் அருகே கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளார். இதையறிந்த பெற்றோர், ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, பழனிசாமி மீது போக்சோ வழக்குப்பதிந்து கைது செய்தனர். பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை: நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (28). பெயின்டர். இவர் நெல்லை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி 2 நாட்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி தகவலின்படி பெற்றோர் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பெருமாள் மாணவியை திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து போக்சோ வழக்குப்பதிந்து தாழையூத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பெருமாளை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளைமத்திய சிறையில் அடைத்தனர்.

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயண நகரில் 70 வயது மூதாட்டி, தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில், மூதாட்டியின் கணவர் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ(55) என்பவர், நைசாக வீட்டிற்குள் புகுந்து மூதாட்டிக்கு பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடவே, பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்து, ராஜூவை பிடித்து தர்ம அடி கொடுத்து குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இதில், காயமடைந்த மூதாட்டி, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், ராஜூவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 10 நாளுக்கு முன், ஒரே நாளில் 2 சிறுமிகளிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 முதியவர்களை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது மூதாட்டி பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: