சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் இடைப்பாடி பஸ் நிறுத்துமிடத்திற்கு பின்புறம், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், அந்த வாலிபருடன் தகராறில் ஈடுபட்டார். திடீரென மர்ம பொருளை கொண்டு அவரின் இடது காது மற்றும் இடது மார்பு பகுதியில் குத்தினார். இதில் அவரது மார்பு மற்றும் காது பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதை பார்த்து பஸ் ஸ்டாண்டில் இருந்த சக பயணிகள் அலறினர். தகலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீசார் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
அவரது உடலில் கீர்த்தி, கலைராஜ், மகா என்ற பெயர்கள் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினோத் (28) என்பது தெரியவந்தது. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், மனைவி கிருத்திகாவுடன், பள்ளப்பட்டி அடுத்த 3 ரோட்டில் வசித்து வந்ததும், ஏற்கனவே கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து பிரிந்ததும் தெரியவந்தது. இதனிடையே, பஸ் ஸ்டாண்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் தகராறில் ஈடுபட்டவர் குத்தூசியால் குத்தி விட்டு நடந்து செல்வது பதிவாகி இருந்தது. இதனால் கொலையாளியும் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
