×

கவர்மென்ட் வேலையும் போச்சு… ரூ.20 கோடியும் போச்சு… எடப்பாடியிடம் கதறும் டாக்டர்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று வேலூர் மாவட்டம் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டாலும், மூன்று மாவட்டங்களுக்கும் நான்தான் ராஜா என்ற போக்கில் மாஜி மந்திரி வீரமணி உள்ளதாக 3 மாவட்ட இலை கட்சியினரும் புலம்பி வருகின்றனர். அதன் எதிரொலிதான், முன்னாள் அதிமுக பெண் அமைச்சரான நீலோபர் கபில் ஆதரவாளர்களுடன் சமீபத்தில் திருப்பத்தூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது.

அப்போது, அவருடன் திமுகவில் ஐக்கியமானவர் எம்ஜிஆர் காலத்து அதிமுக புள்ளியும், அப்போதைய பேரணாம்பட்டு எம்எல்ஏவான ஐ.தமிழரசு. 75 வயதான இவர் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய வடாற்காடு மாவட்டத்தில் அதிமுகவில் கோலோச்சியவர். அதோடு எம்ஜிஆருடன் நெருக்கமானவரும் கூட என்கின்றனர் அதிமுகவினர். இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து மாற்று கட்சிகளுக்கு படையெடுக்கும் அதிமுகவினரின் எண்ணிக்கை உயரும் என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதன்படி, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி தொகுதிக்கு, மாஜி அமைச்சர் வீரமணியின் வற்புறுத்தலின் பேரில் தனது அரசு டாக்டர் பதவியை உதறிவிட்டு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட டாக்டர் பசுபதி, வெளிப்படையாகவே மாஜி அமைச்சர் வீரமணி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம், எனது அரசு பணியை விட்டுவிட்டு, ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை சொத்துக்களை விற்று தோல்வியை தழுவியுள்ளேன். அப்போது கட்சியின் சார்பில் தொகுதிக்கு செலவிட ஒதுக்கப்பட்ட நிதியையும் நான் பெறவில்லை.

இப்போது ஒன்றுமில்லாதவனாக சாதாரண கிராமத்து டாக்டராக எனது பிழைப்பை ஓட்டி வருகிறேன் என்று சொல்லி சீட் கேட்டு வருகிறாராம். அதேபோல், இப்போதைய எம்எல்ஏ செந்தில்குமார், மீண்டும் தனக்கே சீட்டு வழங்க வேண்டும் என்று மாஜி அமைச்சரிடம் மல்லுக்கட்டி நிற்கிறாராம். இவர் தவிர முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத், ஆலங்காயம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மற்றும் மகளிரணி அமைப்பாளர் மஞ்சுளா ஆகியோர் சீட் கேட்டு வரிசை கட்டி நிற்கின்றனர்.

இதையெல்லாம் விட வாணியம்பாடி தொகுதி வேட்பாளராக இதுவரை அந்த தொகுதிக்குள் உள்ள நாட்றம்பள்ளியை சேர்ந்தவர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை. அந்த குறையை இந்த தேர்தலில் போக்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் ஒன்றிய செயலாளர் சாம்ராஜ் சீட் கேட்டு வருகிறாராம். இவ்வாறு வாணியம்பாடி தொகுதிக்கு சீட் கேட்கும் அனைவரும் 2 பேர், 3 பேர் கொண்ட குழுவாக இயங்கி வருகிறார்களாம்.

இவ்வாறு மாஜி அமைச்சர் வீரமணி மீது அதிருப்தியுடன் உள்ள மேற்கண்ட குழுக்கள் சட்டமன்ற தேர்தல் தேதிக்குள் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் விரைவில் மாற்றுக்கட்சியிடம் தஞ்சமடைய முடிவு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவை கலகலக்க வைத்துள்ளதாம். இது எங்கு போய் முடியுமோ? என்ற கவலையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் புலம்பி வருகிறார்களாம்.

 

Tags : Edappadi ,Vellore ,Ranipet ,Tirupattur ,Leaf Party ,Minister ,Veeramani ,AIADMK ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்