×

ஓபிஎஸ் திடீர் யு-டர்ன்; ஷாக்கில் அதிமுக, பாஜ: தனியே… தன்னந்தனியே…பரிதாபத்தில் ராமதாஸ்!

கடந்த 2024 டிசம்பர் இறுதியில் புத்தாண்டு பொதுக்கூட்ட மேடையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையிலான விரிசல், கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியது. அப்பாவுக்கு எதிராக செயல்பட்ட அன்புமணி பாமகவின் சின்னம், கொடிக்கு சொந்தம் கொண்டாடினாலும், ராமதாஸ் தரப்பில் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருவதோடு கட்சியின் விதிகளின்படி பி-பார்ம், சி-பார்ம் படிவங்களில் நிறுவனர்தான் கையெழுத்திட முடியும் என உறுதிபடகூறி வருவதால் இறுதிகட்ட நிலைப்பாடு குழப்பமாகவே உள்ளது.

ஆனாலும், தாங்கள் பாஜ கூட்டணியில் உள்ளதால், தேர்தல் ஆணையமும், நீதிமன்ற தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாகவே வரும் என்று அன்புமணி தரப்பினர் மனக்கணக்கு போட்டு வருகின்றனர்.இருப்பினும், 2026 பொதுத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாமகவில் இரண்டு தரப்பும் தங்களது ஆதரவு நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை வாங்கின. இதில் அன்புமணி, அதிமுக, பாஜ கூட்டணியை உறுதிபடுத்தி உத்தேச தொகுதி பங்கீடும் பேசி முடித்து விட்டதாக தகவல் கசிந்து வருகின்றன.

ஆனால், ராமதாஸ் தரப்பிலோ இதுவரை கூட்டணி இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடிப்பதால் நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்ந்துபோய் உள்ளனர். கடந்த டிசம்பரில் இருந்தே கூட்டணி தொடர்பாக ராமதாஸ் பேட்டியளித்தாலும், இதுவரை எந்த அரசியல் கட்சிகளுடனும் அவர்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பாமகவில் பெரும்பாலான ஆதரவாளர்கள் அன்புமணி பக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே தமிழகத்தின் 2 பெரிய கட்சிகளும் ராமதாஸ் தரப்புடன் கூட்டணியை விரும்பாமல் புறக்கணிப்பது அதை உறுதிபடுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று பெரிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது திமுக, அதிமுகவின் கதவுகள் ராமதாசுக்கு திறக்கப்படாமல் இருப்பது அத்தரப்புக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக ஆட்சியை புகழ்ந்த ராமதாஸ் திடீரென பல்டி அடித்தார். அதேபோல் திருமாவளவனை புகழ்ந்து ராமதாஸ் தரப்பு திடீரென சைலண்ட் ஆனது. இதுபோன்ற நிலையற்ற அரசியல் தன்மையால் எந்த கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தையை முழுமையாக ராமதாஸ் தரப்பில் மேற்கொள்ள தயங்குவதாக தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு சட்டபேரவை கூட்டத் தொடரில் பங்கேற்ற ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள், எடப்பாடி பழனிசாமியை வலியச் சென்று சந்தித்தார். புதிய கட்சியான தவெககூட ராமதாசின் சீட் பேரத்துக்கு ஒத்துப் போகாததால் தான், வேறுவழியின்றி அதிமுகவிடம் தஞ்சமடையும் முடிவுக்கு ராமதாஸ் தரப்பு வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் பாஜ வலையில் உள்ள எடப்பாடியும் எந்தவித பிடியும் கொடுக்காமல் நழுவுவதால் பாமகவின் ஆளுமையான ராமதாஸ் தனித்து விடப்படும் சூழ்நிலை உள்ளது.

அதேசமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, ‘தொண்டர் மீட்பு கழகத்தை’ ஒற்றை ஆளாக நடத்தி வரும் ஓபிஎஸ்சும், அதிமுகவில் சேர்த்துக் கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காததால் என்ன செய்வது, எங்கே போவது என்று திக்கு தெரியாமல் திண்டாடி வந்தார். டிடிவி.தினகரனை சேர்த்துக் கொண்டதுபோல தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சியும் பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ், சசிகலாவை மீண்டும் சேர்க்கவே மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அதேசமயம் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் ஓபிஎஸ் எங்களோடுதான் இருக்கிறார் என்று கூறிவந்தனர். ஓபிஎஸ்சும் கூட்டணி பற்றி எந்த முடிவையும் அறிவிக்காமல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றே தொடர்ந்து கூறினார். இந்த நிலையில், நேற்று தமிழக சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓபிஎஸ் பேசினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்த நல்ல திட்டங்கள் மக்கள் மனதில் நிறைந்துள்ளது, எனவே 2026 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று திமுகவின் திராவிட மாடல் ஆட்சிதான் வரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், 5 ஆண்டு சிறப்பான ஆட்சி நிறைவுபெற்றதால் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்று கூறினார். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பேசுகையில் “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார், அந்தளவுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்” என்றார்.

ஏற்கனவே, முதல்வர் மு.க.ஸ்டாலினை நடைபயிற்சியின்போது 2 முறை ஓபிஎஸ் சந்தித்தார். பின்னர், முதல்வரை அவரது முகாம் அலுவலகத்திலும் சந்தித்தார். தற்போதைய சந்திப்பின் மூலம் ஓபிஎஸ் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது. ஓபிஎஸ் இந்த முடிவால் சசிகலா, டிடிவி, பாஜ, அதிமுக ஆகியோர் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மட்டுமே தனித்து விடப்பட்டு, என்ன செய்வது எங்கு போவது என்று முடிவு எடுக்காமல் திக்கி திண்டாடி வருகிறார்.

* பிரஸ் மீட் கேன்சல்
கடந்த 12ம்தேதி தைலாபுரம் வியாழன் செய்தியாளர் சந்திப்பின்போது, அடுத்த வாரம் ‘அய்யா பாமக’ கட்சி துவக்கம் தொடர்பாகவும், கூட்டணி பற்றியும் தெரிவிப்பதாக ராமதாஸ் சூசகமாக கூறியிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் வழக்கமான செய்தியாளர் சந்திப்பை ராமதாஸ் ரத்து செய்து விட்டார். கூட்டணி தொடர்பாக யாரும் பிடிகொடுக்காத விரக்தியால்தான், இச்சந்திப்பு நடத்தப்படவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : OPS ,AIADMK ,BJP ,Ramadoss ,PMK ,Anbumani ,New Year ,
× RELATED தகுதிச்சான்று கட்டண உயர்வை அரசு...