சென்னை: தமிழகத்தின் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு தேவையான நிலங்கள் தொடர்பான விதிமுறைகளை எளிமைப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 17ல் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள், வல்லுனர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இந்த மசோதா திரும்பப் பெறப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கருத்து தெரிவித்திருந்தார்.
சட்டசபை நிகழ்வுகள் நேற்று காலை தொடங்கியதும், தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன்வடிவு திரும்பப் பெறுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அரசினர் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதை ஏற்று பெரும்பான்மை ஆதரவுடன் சட்ட திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
