சென்னை: சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதாவது; 16-வது சட்டமன்ற தேர்தல் முடிவுற்று, முதல்வர் பொறுப்பேற்றவுடன் அவர் உரையை நானும் கவனித்தேன். அந்த உரையில் ‘இது எனது அரசு அல்ல; இது நமது அரசு’ என்று சொன்னார். அந்த வார்த்தையைக் கேட்டு, நான் பேருவகை கொண்டேன். ஏதோ வார்த்தையால் மட்டுமல்ல, நான் உள்பட எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிற சட்டமன்றத் தொகுதிகளுக்கெல்லாம் கேட்டதைக் கொடுத்தவர், நிறைவு செய்தவர் முதல்வர் என்பதை இந்த நேரத்தில் எண்ணிப்பார்த்து, நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கட்சி மாச்சரியங்கள் இருக்கலாம்; வேறுபாடுகள் இருக்கலாம்; கொள்கைகளில் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனாலும்கூட, இந்த மாமன்றம் என்பது வரலாற்று பெருமைக்குரியது என்பதை நினைவுப்படுத்துகிற வகையிலேதான் ஐந்தாண்டு காலம் நிறைவேற்றியிருக்கிறோம். எல்லோரும் இங்கே உட்கார்ந்து பேசினோம், பழகினோம். எல்லோரும் இன்று பிரிந்து செல்கிறோம். மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது, வருத்தமாகத்தான் இருக்கிறது.
மீண்டும் யார் வருவார்கள் என்பதை அந்தந்த தொகுதி மக்கள் தீர்மானிப்பார்கள் என்று நான் குற்றச்சாட்டாக சொல்லவில்லை. எல்லோரையும் அரவணைத்து, எதிரும் புதிருமான கருத்துகள் வந்தாலும்கூட, அதை ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் படைத்த நம்முடைய முதல்வருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு ஒரு நாடு, நல்ல நாடாக முன்னேறுவதற்கு, கொள்கை திட்டங்களை வகுப்பது, செயல் திட்டங்களை நிறைவேற்றுவது, அதனால் மக்கள் வளர்ச்சி பெறக்கூடிய வகையில், “இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்ல தரசு” என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னரே, அதற்கேற்ப நம்முடைய முதல்வரும் அமைச்சர்களும் செய்ததையெல்லாம் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
