×

ஜெயலலிதா ஆசியுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார்: ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு உசிலம்பட்டி தொகுதி அதிமுக உறுப்பினர் அய்யப்பன் (ஓபிஎஸ் ஆதரவாளர்) பேசியதாவது:  முதல்வர் ரூ.5,000 கொடுத்துவிட்டார் என்று இந்த அவையிலே கூப்பாடு போட்ட, தலைவர்கள் எல்லாம் இன்று வரவில்லை. ஆனால், இந்த காலை உணவுத் திட்டத்தை ஏன் இவர்கள் பாராட்டவில்லை. பாராட்ட மனம் இல்லை. அப்படிப்பட்ட திட்டத்தைக் கொண்டு வந்த முதல்வர்.

எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தைப் பற்றி இன்றைக்கும் பேசுகிறோமே. நாளையும் பேசுவோமோ. அதுபோல இந்த காலை உணவுத் திட்டத்தை தமிழ்ச் சமுதாயம் இருக்கும்வரை, முதல்வரை பாராட்டிக் கொண்டே இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள கள்ளர் சீரமைப்புத் துறை சார்பாக பள்ளிகளில் ஆசிரியர் பணியிடப் பற்றாக்குறையை, அந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்வு செய்துகொள்ளலாம், அதற்குண்டான தொகுப்பூதியம் அரசு வழங்கும் என்ற ஓர் அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த அரசாணை மூலம் ஏறக்குறைய திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள கள்ளர் பள்ளிகளுக்கு, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அந்தப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, அந்தப் பள்ளி மாணவர்களின் சார்பாகவும், எனது தொகுதி மக்களின் சார்பாகவும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்கள் எப்பொழுது கையை தூக்கினாலும் உடனே எங்களுக்கு பேசுகின்ற வாய்ப்பை வழங்கிய பேரவை தலைவருக்கு எனது தொகுதி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று தமிழ்நாட்டின் முதல்வராக நமது தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று, எம்.ஜி.ஆர். ஆசியோடும், ஜெயலலிதா ஆசியோடும் மீண்டும், மீண்டும் வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : MK Stalin ,Chief Minister ,Jayalalithaa ,OPS ,MLA ,Ayyappan ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Usilampatti AIADMK ,
× RELATED தகுதிச்சான்று கட்டண உயர்வை அரசு...