×

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி 15 காவல்துறை அதிகாரிகளை படம் எடுத்து சிபிஐ விசாரணை: விரைவில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல்

கரூர்: கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் 15 பேரை நிற்கவைத்து புகைப்படம் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விரைவில் குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த நாளில் விஜய் பிரசாரத்தின் போது நிறுத்தப்பட்டிருந்த வாகனம், அதன் சுற்றுப்பகுதி, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடியாக நேற்று சிபிஐ ஆய்வு மேற்கொண்டது. அப்போது அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் நகர டிஎஸ்பி செல்வராஜ், எஸ்ஐ உள்ளிட்ட 15 காவலர்களை, சம்பந்தப்பட்ட இடத்திலேயே நிறுத்தி தடுப்பு கயிறு கட்டி புகைப்படம் எடுத்து சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். பின்னர் அந்த இடத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக விசாரணை செய்தனர்.

விபத்து நிகழ்ந்த தருணத்தில் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன, வாகனங்கள் நிறுத்தப்பட்ட விதம், போக்குவரத்து கட்டுப்பாடு, கூட்ட மேலாண்மை, அவசர நடவடிக்கைகள் ஆகியவை முறையாக பின்பற்றப்பட்டதா என்பதையும் அதிகாரிகள் விரிவாக கேட்டறிந்து பதிவு செய்து கொண்டனர். சம்பவத்திற்கு முன்பும் பின்னரும் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆவணங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் சாட்சியங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை விரைவில் திருச்சி கோர்ட்டில் தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Vijay ,Karur ,CBI ,
× RELATED கோடைகால விடுமுறை பயணத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்