தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜ தெரிவித்து வருகிறது. பாஜ தங்களது கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டாலே போதும். அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளை பற்றி கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக -காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக் கூடிய கூட்டணி.
அதனால் அதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மாநில சுயாட்சிக்கு திமுக, காங்கிரஸ் மத்தியில் அங்கம் வகிக்கும்போது சட்டங்கள் எதுவும் இயற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநிலத்தையே கொண்டு போய் அடகு வைத்தவர் தான் எதிர்க்கட்சி தலைவர். திமுகவின் அடிப்படை கொள்கையே மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
