அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால், வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா புதிய கட்சி தொடங்க உள்ளார். இதுதொடர்பாக, தஞ்சையில் நிர்வாகிகளை சசிகலா சந்திப்பதற்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சசிகலா நிர்வாகிகளை சந்திக்காமல் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார். சசிகலாவின் கணவர் நடராஜனின் மூத்த சகோதரர் சாமிநாதன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தாராம்.
அவரை பார்ப்பதற்காக சசிகலா சென்றதால், நிர்வாகிகள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சசிகலா நேற்று தஞ்சை அருகே விளார் சாலையில் உள்ள அவரது குலதெய்வ கோயிலான மதுரை வீரன், வீரனார் ஆலயத்திற்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். சசிகலா அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு முன்பு அவரது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துதான் முடிவை எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜெயலலிதா பிறந்தநாள் அன்று புதிய கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதால் இந்த சிறப்பு வழிபாட்டிற்கு சசிகலா ஏற்பாடு செய்திருந்தார் என அவரது தரப்பினர் தெரிவித்தனர். பாஜ கூட்டணியை விட்டு டிடிவி தினகரன் வெளியேறிய நிலையில் மீண்டும் அவரை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜ மூத்த தலைவர்கள் மிகவும் வேகமாக செயல்பட்டனர்.
ஆனால் பாஜ ஆதரவு நிலையில் இருந்த சசிகலாவை கூட்டணிக்கு அழைத்து வருவதில் எவ்வித முயற்சியையும் பாஜ மூத்த தலைவர்கள் எடுக்காததால் வெறுத்துப் போன நிலையில்தான் புதிய கட்சியை தொடங்குகிறார். புதிய கட்சி தொடங்கினாலும் சசிகலா பாஜவுடன் கூட்டணி வைக்கப் போவது இல்லை. கட்சி தொடங்கியவுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என சசிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
