×

குமரிக்கு குறி மார்க்சிஸ்ட் வியூகம்!

தமிழகத்தின் தென்முனை மாவட்டமான கன்னியாகுமரி, ஆன்மிகம் மற்றும் கலாச்சாரப் பின்னணி கொண்டது மட்டுமல்ல, அது வீரியமிக்க தொழிற்சங்கப் போராட்டங்களின் விளைநிலமுமாகும். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாவட்டத்தில் இழந்த தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தீவிரமான களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. குமரி மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது வெறும் அரசியல் கட்சியல்ல. அது உழைக்கும் மக்களின் வாழ்வாதார அரணாகவே பார்க்கப்பட்டது.

விளவங்கோடு மற்றும் திருவட்டாறு (தற்போது பத்மநாபபுரத்தின் ஒரு பகுதி) தொகுதிகளில் 1960-களில் தொடங்கி இப்பகுதிகளில் உள்ள ரப்பர் மற்றும் முந்திரித் தோட்டத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. மறைந்த மாபெரும் தலைவர் ஜெ.ஹேமச்சந்திரன் திருவட்டாறு தொகுதியில் 5 முறை வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் குரலாக ஒலித்தார்.

அதேபோல், திருவட்டாறு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற தொடர் வெற்றிகள் அக்கட்சியை மாவட்டத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றின. கடந்த 2021 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குமரி மாவட்டத்தில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில் சிஐடியு இன்றும் முதன்மைத் தொழிற்சங்கமாக உள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்கு வங்கி மிக முக்கிய காரணியாக இருந்தது. இதற்கு கைமாறாக சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் குமரி மாவட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டைக் கோர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விளவங்கோடு, கட்சியின் பாரம்பரியக் கோட்டை என்பதால் இங்கு மீண்டும் போட்டியிட அக்கட்சி ஆர்வம் காட்டுகிறது.

பத்மநாபபுரம், திருவட்டாறு பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. நாகர்கோவில் அல்லது கிள்ளியூர் நகர்ப்புற தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து இங்கும் காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. இந்த முறை ஏதேனும் ஒரு தொகுதியை கேட்டு பெற்றாக வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் உறுதியாக உள்ளது.

திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஏற்கனவே தங்களின் வசமுள்ள தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வருவார்களா? என்பது கேள்விக்குறியே. குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கட்சிக்கு நிலையான ஒரு வாக்கு வங்கி எப்போதும் உண்டு. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு, தங்களுக்குச் செல்வாக்குள்ள தொகுதியை பெற்றால், 2026ல் குமரி மாவட்டத்தில் மீண்டும் ‘சிவப்புச் சூரியன்’ பிரகாசிக்க வாய்ப்புள்ளது.

Tags : Kumari ,Kanyakumari ,Tamil Nadu ,2026 assembly elections ,Communist Party of India ,Marxist ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்