×

சொன்னாரு..! செஞ்சாரு..!! தமிழ் புதல்வன் திட்டம்: 492 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சொன்னாரு: மாணவிகளுக்கான ‘புதுமைப்பெண்’ திட்டத்தைப் போலவே, மாணவர்களுக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் 2024-2025ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தை அறிவித்தார்.

செஞ்சாரு: கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி (டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ போன்றவை) பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் (47%) தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இத்திட்டம் இந்த விகிதத்தை மேலும் உயர்த்தும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, வறுமை காரணமாகப் பள்ளிப்படிப்புடன் படிப்பை நிறுத்தும் மாணவர்களை இது கல்லூரிக்கு அழைத்து வருகிறது.

பள்ளி முடித்தவுடன் குடும்பச் சுமை காரணமாக வேலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு, இந்த ரூ.1,000 ஒரு சிறு ஊக்கத்தொகையாக அமைகிறது. இது, மாணவர்களின் கல்வி இடைநிற்றலை பெருமளவு குறைத்துள்ளதாகக் கல்வித்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது வெறும் உதவித்தொகை அல்ல; இது ஒரு தலைமுறையின் அறிவுசார் முதலீடு என்றும், நீண்டகால அடிப்படையில் தமிழகத்தின் மனிதவள மேம்பாட்டு குறியீட்டை உயர்த்தும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* 2024-25: இத்திட்டத்திற்காகத் தொடக்கத்தில் சுமார் ரூ. 360 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, இது ரூ. 401.47 கோடி ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

* 2025-26: இத்திட்டத்தின் கீழ் சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருவதால், வரும் ஆண்டிற்கு சுமார் ரூ.420 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2026-27: இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்காக ரூ.492 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* இடைக்கால பட்ஜெட்டில், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய இரு திட்டங்கள் வாயிலாக மொத்தமாக 12 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் உயர்கல்வி உதவித்தொகை பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Sencharu ,M.K. Stalin… ,
× RELATED தேமுதிகவின் `வி’ சென்டிமென்ட்