கிருஷ்ணகிரி அருகிலுள்ள கிராமத்தில், செங்கல் சூளையில் வேலை செய்யும் ஜெயராவ் மகள் வேம்புவுக்கு (ஷீலா) படிப்பில் நாட்டம் இருந்தாலும், சிலம்பத்தின் மூலம் சாதித்து அரசு வேலையில் ேசர வேண்டும் என்பது லட்சியம். அவரது அத்தை மகன் ஹரி கிருஷ்ணனை திருமணம் செய்கிறார் ஷீலா. அவர் சாதிக்க ஹரி சப்போர்ட் செய்கிறார்.
இந்நிலையில் ஷீலாவின் பார்வை பறிபோகிறது. செய்வதறியாது திகைத்து நிற்கும் ஷீலா என்ன செய்தார்? அவரது லட்சியம் நிறைவேறியதா என்பது மீதி கதை. பெண்ணின் லட்சியத்துக்கு முக்கியத்துவம் கொண்ட வேம்பு என்ற கேரக்டராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார், ஷீலா. இயல்பான கிராமத்து இளைஞனாக வருகிறார் ஹரி கிருஷ்ணன்.
ஹரி கிருஷ்ணனின் அம்மா ஜானகி, வேம்புவின் பெற்றோர், போட்டோ ஸ்டுடியோ சிறுவன் கவனத்தை ஈர்க்கின்றனர். எம்எல்ஏவாக, மறைந்த மாரிமுத்து நடித்துள்ளார். ஏ.குமரனின் ஒளிப்பதிவு. மணிகண்டன் முரளியின் பின்னணி இசை கதையை நகர்த்த உதவியுள்ளது. மெதுவாக நகரும் சில காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது. ஆனால், பெண்களுக்கு தற்காப்புக்கலை மட்டுமே பாதுகாக்க உதவும் என சொன்ன இயக்குனர் வி.ஜஸ்டின் பிரபுவுக்கு பாராட்டுகள்.