பாலிவுட் முன்னணி நடிகை பிரீத்தி ஜிந்தா, சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, மறைந்த இந்திய ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனுக்காக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வழங்கினார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப நல அசோசியேஷனுக்கு இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ராணுவ வீரர்களின் துணிச்சலான குடும்பங்களை ஆதரிப்பது நமது பொறுப்பாகும். நமது ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும் கூட, நாம் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று, அவர்கள் முன்னேற உதவி செய்ய முடியும்.
நம் வீரர்களை எண்ணி நாம் நம்பமுடியாத அளவுக்கு பெருமைப்படுகிறோம். தேசத்துக்கும், அதன் துணிச்சலான பாதுகாவலர்களுக்கும் நாம் ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்றார். இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஐபிஎல் பஞ்சாப் அணியின் பங்குதாரராக இருக்கும் பிரீத்தி ஜிந்தா, கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ், ஐபிஎல் அணியில் கிடைத்த வருமானத்தில் இந்த நிதியை வழங்கியுள்ளார்.