சென்னை: ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ ஆகிய படங்களை இயக்கியவர், ராம். சில படங்களில் நடித்த அவர், தற்போது நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் விரைவில் ரிலீசாகிறது. அடுத்து ராம் எழுதி இயக்கிய ‘பறந்து போ’ என்ற படம், வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது. சிவா, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ், கிரேஸ் ஆண்டனி மற்றும் சில குழந்தைகள் நடித்துள்ளனர். படம் குறித்து ராம் கூறியதாவது: ‘கற்றது தமிழ்’ படத்தின் பாடலை, கடப்பாவில் சூரியகாந்தி தோட்டத்தில் படமாக்கினோம். பிறகு ‘தங்க மீன்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடலை சூரியகாந்தி தோட்டத்தில் படமாக்க முயற்சித்தேன். அது சூரியகாந்தி பூக்கும் காலம் இல்லை. கேரளா அச்சன்கோயிலில், பனி பொழியும் மலை மீது ஷூட்டிங் நடத்தி னோம். ‘பேரன்பு’ படத்துக்காகவும் சூரியகாந்தி தோட்டத்துக்கு நடுவில் ஒரு வீடு வேண்டும் என்று தேடினோம்.
அப்போதும் சூரியகாந்தி பூக்கும் காலம் இல்லை. எனவே, அந்த வீட்டை கொடைக்கானல் மன்னவனூர் ஏரிக்கரைக்கு மாற்றினோம். ‘பறந்து போ’ படத்தில் சூரியகாந்தி கதைக்குள் வந்தது. சூரியகாந்தி பூக்கும் காலம் வாய்க்கவில்லை என்றாலும், மைசூரு பகுதியில் இருக்கும் ஒரு தோட்டமும், அன்னூரில் ஒற்றை சூரியகாந்தி மலரும் கிடைத்தது. சூரியகாந்தியை படமாக்கும் வேட்கை ஒவ்வொரு படத்திலும் கூடிக்கொண்டே இருக்கிறது. காரணம், அது சூரியகாந்தி. அப்பாவின் பால்யமும், மகனின் பால்யமும் இணையும் பாடலான சன்பிளவருக்கு மதன் கார்க்கி வரிகள் எழுத, விஜய் யேசுதாஸ் பாடினார். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.